அரூ அறிமுகம்: டிராகன்களைப் பழக்குதல்

“டிராகன்கள், ஹாபிட்டுகள், இந்தக் குட்டி விசித்திர பச்சைமனிதர்கள் – எதற்கு இவையெல்லாம்?

உண்மையான பதில் இதுதான்:

அவை களிப்புக்கும், மகிழ்ச்சிக்கும்! கனவுலகம் கண்டிப்பாக உண்மையானது. அது நிகழ்ந்ததல்லதான், ஆனால் நிஜம். குழந்தைகளுக்கு அது தெரியும். பெரியவர்களும் அதை அறிவார்கள், அதனாலேயே அவர்கள் அவ்வுலகத்தைக் கண்டு அஞ்சுகிறார்கள். அவ்வுலகம் பிரதிபலிக்கும் உண்மை, அவர்களது அற்ப வாழ்வின் அத்தனை அனாவசியங்களையும், பாசாங்குகளையும் கேலி செய்து அச்சுறுத்துவதால் அதைக் கண்டு பயப்படுகிறார்கள். அவர்கள் உண்மையைக் கண்டு அஞ்சுவதால், டிராகன்களைக் கண்டும் அஞ்சுகிறார்கள்!”

மிகைப் புனைவும் (fantasy fiction), அறிவியல் புனைவும் (science fiction) இலக்கியமாகக் கருதப்பட்டிராத காலகட்டத்தில் உர்சுலா லே க்வின் (Ursula Le Guin) சொன்னது (Why Americans are afraid of dragons?).

நாம் அங்கிருந்து வெகுதூரம் கடந்து வந்திருக்கிறோம். இன்று, ஐசக் அசிமோவையும் ஜே. கே.ரௌலிங்கையும், ஜே.ஆர்.ஆர்.டோக்கினையும் நாம் இரயில் பயணத்தின்போது தயக்கமின்றி படிக்கலாம். இலக்கிய விழாக்களில், நீல் கெய்மனிடம் கையெழுத்து வாங்க நீண்ட வரிசை காத்திருக்கிறது. மிகைப்புனைவு எழுதியதற்காக கஸுவோ இஷிகுரோவிற்கு நோபல் பரிசு அளிக்கப்படாமல் இல்லை.

மேற்குலகில், அறிவியல் புனைவையும் (science fiction) மிகைப்புனைவையும் (fantasy) ஒன்றாகச் சேர்த்து ஊகப்புனைவு (speculative fiction) என்றழைக்கிறார்கள். சமகாலப் புனைவின் கலந்தூடாடும் தன்மையின் காரணமாக, வகைமைகளின் இறுக்கம் மெல்லத் தளர்ந்து வருகிறது. கற்பனாவாதம் மிகுந்த அத்தனை புனைவுகளையுமே (அறிவியல் புனைவு உட்பட), கனவுருப்புனைவென அழைத்துக்கொள்வோம்.

தமிழில், சீவக சிந்தாமணி, கம்பராமாயணம் தொடங்கி சமீபத்திய குள்ளச் சித்தன் சரித்திரம் வரை கனவுருப்புனைவின் வரலாறு நீண்டிருக்கிறது. அறிவியல் புனைகதைகள், இயற்கையை மீறிய, அதற்கு மேற்பட்ட அல்லது வினோதமான ‘காத்திக்’ (Gothic) வகை கதைகளிலிருந்து வந்தவை என்கிறார் அக்கதைகளின் முன்னோடியான சுஜாதா (‘விஞ்ஞானச் சிறுகதைகள்’ தொகுப்பின் முன்னுரையில்). அவரது காலம் தொட்டு ஜெயமோகனின் ‘விசும்பு’ வரையான பரப்பு இருந்தாலும், தமிழில் அறிவியல் புனைவு பரவலாக எழுதப்படவில்லையோ எனத் தோன்றுகிறது. நேர்மாறாக, ஆங்கிலத்தில் அறிவியல் புனைவுகள், விண்வெளிப் பயணங்களையும், வேற்றுகிரக வாசிகளையும், ரோபாட்களையும் தாண்டி நுட்பமான எல்லைகளைத் தொட்டு வருகின்றன. நெட்ப்ளிக்ஸின் (Netflix) பிரபலமான ‘Black Mirror’ தொலைக்காட்சித் தொடரை ஓர் உதாரணமாகச் சொல்லலாம்.

மிகைப் புனைவு, அறிவியல் புனைவு என அத்தனை வகைமைகளின் நோக்கம் ஒன்றாகவே இருக்கிறது – அறிவியலின், சித்தரிக்கப்பட்ட உலகின், ஊடாக மனிதனின் இருப்பையும், அகத்தையும் அறிய முயல்தல்.

அரூ – என்ன? எதற்கு?

அரூ என்பது ‘அரூபத்தின்’ சுருங்கிய வடிவம். முடிவிலா காலமும், வெளியுமற்ற பரப்பில் பறந்து திரிகிற அரூபமான மனித மனம்தான் அத்தனை மொழிகளையும், கலைகளையும், தத்துவங்களையும், உருவங்களையும் நமக்குத் தருவித்துத் தந்திருக்கிறது. தெரிந்த வடிவங்களின் எல்லைகளுக்குள் பயணிப்பதன் ஊடாக, அரூபத்தின் தரிசனத்திற்கான தேடல்தான் இந்த ‘அரூ’. முக்கியமாக, டிராகன்களுக்குப் பயப்படாத, டிராகன்களைப் பாதியில் விட்டுவிடாத, டிராகன்களுடன் தன் வாழ்நாள் முழுதும் பயணிக்கிற மனங்களை உருவாக்க வேண்டியிருக்கிறது. ‘அரூ’ நனவுலகின் விளிம்பில் நின்றபடி, கனவுலகிற்குள் கைவிட்டுப் பார்ப்பதைப் போன்றதொரு முயற்சிதான்.

‘அரூ’ கனவுருப்புனைவு சார்ந்த படைப்புகளை வெளியிடும் தமிழ் மின்னிதழாக இருக்கும். இது, சிறுகதைகள், குறுங்கதைகள், ஓவியங்கள், புகைப்படங்கள், சினிமா, காமிக்ஸ், நடனம், இசை என அத்தனை கலை வடிவங்களுக்குமான களமாக இருக்கும். எவ்வகைமையிலும், வடிவிலும் அடங்காத பரீட்சார்த்த கலைப் படைப்புகளையும் அரூ வெளியிடும். அரூவை வாசிக்க, தமிழும், சிறிது கற்பனையும், தீராத தேடலும் போதும். காலாண்டுக்கு ஒரு முறை, உங்களைச் சந்திக்கவிருக்கிறோம்.


அரூவின் லோகோவை வடிவமைத்தவர்: இளையபாரத் (ஈபி)