தப்பிச்செல்லும் கிரகங்கள்

21 நிமிட வாசிப்பு

சிமிட்டிப்பார்க்கும் நட்சத்திரங்களின் பார்வைக்கு நேரெதிரில் அமர்ந்திருந்தான் கேமசரி. தொலைநோக்கி இல்லாமலேயே கண்களைச் சுருக்கி விரித்து தனக்கும் வானத்திற்குமான இடைவெளியைக் குறைக்க முயன்றான். நிஜத்தைப் பின்பற்றும் தேகத்தைவிட பாவனைக்கு இசையும் உடலுக்கு ஒன்றல்ல, இரண்டல்ல ஆயிரம் அர்த்தங்களுண்டு. ஆளரவமற்ற ஆய்வகம் தனிமையில் அவனோடு மௌனமாக நீண்டிருந்தது. அறைச்சுவர்களின் எதிரொலிகள் அவன் புரட்டும் காகிதங்களையும் சத்தம் புரியச் செய்தன. வீட்டிற்குத் தொடர்புகொண்டு அம்மாவின் நிலைகுறித்து அறிந்துகொண்டபின், நள்ளிரவில் தூக்கக் கலக்கத்தில் ஒளிர் திரையைக் கண்காணித்துக்கொண்டிருந்தான். புவியியல் மற்றும் சூழலியல் மாற்றங்களைக் கண்காணிக்கும் பணியில் கேமசரியின் குழுவிற்கு எப்போதும் பதிலற்ற முடிவுகளே காணக்கிடைக்கும். பலநேரங்களில் எந்தவித அறிகுறிகளும் இல்லாமல் வெற்றுத் தகவல்களால் கணினிகளின் நினைவகம் நிரம்பி வழியும். பதில்கள் ஒருபோதும் தெளிவை உண்டாக்குவதில்லை, அது தெளிவை நோக்கி நகர்த்தவல்லதுதான் என்று புரிந்துகொள்ளவே கேமசரிக்கு நாளானது. பொழுதுக்கும் காண்கிற அனேகமான கனவுகளால் அவன் மறைமுகமாகத் தன்னையே பலிகொடுத்துக்கொண்டிருந்தான். இப்போதைக்கு அவனைத் தவிர்த்து அந்த வெறுமையை ஏற்றுக்கொள்வோர் அங்கே வேறு யாருமில்லை. கேமசரியின் பேராசிரியர் விடுப்பில் சென்றிருந்தார். பன்னாட்டு வானியல் ஒன்றியத்தின் கூட்டத்திற்கு இந்தியாவின் சார்பாகக் கலந்துகொள்ளப்போவதால், அடுத்த ஒரு மாதத்திற்கு அவரின் தலையீடுகள் எதுவும் நேரடியாக ஆய்வகத்தில் பலிக்கப்போவதில்லை. அதுவரையில் ஆய்வகத்தின் அன்றாடத்தைத் திட்டமிடும் பொறுப்பு வருண் மற்றும் கேமசரியினுடையதாகும். ஆனால் எதிர்பாராத விதமாய் அடுத்த மூன்று நாட்களுக்கு வருணும் அங்கே வரமுடியாத சூழ்நிலை. என்ன காரணமென்பதையும் சொல்லாமல் அன்று ஆய்வகத்திலிருந்து கிளம்பிச் சென்ற வருண் தன் குடும்ப ஜோதிடரிடம் செல்லும் அவசரத்திலிருந்தான்.

காலைமுதல் பணிபுரிந்து சோர்வுற்ற மூளைக்கு ஒருகணம் எல்லாம் அவனுக்கு மங்கலாகத் தெரிந்தது. வழக்கமாக நேரும் அதே கனவு அவனுக்குள் மெதுமெதுவாய் உருக்கொண்டது. பிரபஞ்சமே திரையாகத் தெளிவற்று அசைந்தது. மனமெங்கும் பூரணமான வான்வெளியும் அதில் வெறுமையான அசைவுகளுமே நிறைந்திருந்தன. பார்வை முழுக்க எழுத்துருக்களாக மிதக்க, அகன்ற பால்வெளியின் இருட்டு அவன் புத்தியிலும் படர ஆரம்பித்தது. உறங்காமல் வேலைசெய்து ஓய்ந்த கண்கள் கொஞ்சம் கொஞ்சமாக அவனை வெட்டவெளியில் தனித்துவிட்டது. எவ்வளவு நேரம் உறங்கினான் என்பது தெரியவில்லை. ஆனால் மெதுமெதுவாய் யாராலும் கணிக்க முடியாதளவு பிரம்மாண்ட விண்மீனாய் உருகொண்ட அவனுடல் ஒளிபொருந்தி அனைத்தின் முன்பாகவும் மிதந்துகொண்டிருந்தான். கணக்கின்றி வியாபித்திருக்கும் யுகங்களின் தொலைவுகளைத் தன் வெளிச்சத் தூண்டிலால் அளந்துகொண்டிருந்தான். கொஞ்சம் கொஞ்சமாக அனைத்துமானான். இப்போது இந்தப் பிரபஞ்சத்தின் எந்தவொரு புள்ளியையும் வேறொரு இடத்திற்கு மாற்றிவைப்பதும் அவனைப் பொறுத்தவரைக்கும் எளிதானதே. ஒரு பெரும் மனித விண்மீனாகத் தன்னைக் கண்டுகொண்ட கேமசரி மீண்டும் ஏதோவொரு உந்துதலில் தன் கண்ணெதிரே பலகோடித் துகள்களாக நொறுங்கிச் சிதற உறக்கத்திலிருந்து விழித்தெழுந்தான்.

எழுப்பிய அலாரத்தின் மெல்லிய ஒலி அரைத்தூக்கத்தில் அவனைக் கண்காணிக்கும் திரையினை நோட்டமிட வைத்தது. அக்கணம் பூமியிலிருந்து சில ஆயிரம் கி. மீட்டர் தொலைவில் அதீத வெளிச்சத்தில் பந்து போன்ற வடிவில் ஒரு வளையம் கடந்துசென்றதைக் கண்டதும், கேமசரி நாற்காலியிலிருந்து திடுக்கிட்டு எழுந்தான். நிச்சயம் அது துணைக்கோளாகவோ அல்லது படபடக்கும் நட்சத்திரத்தின் உதிரிபாகமோ என்று எண்ணத் தோன்றவில்லை. எந்தவிதக் கரும்புள்ளிகளும் அதனுள்ளே தென்படவில்லை. கண்களில் ஒட்டிக்கொண்டிருந்த சோம்பலின் மிச்சத்தைத் தேய்த்து மீண்டவன், மீண்டும் தொலைநோக்கியின் கண்களானான். மிதமான வேகத்தில் ஒழுங்கற்ற பிம்பமாக சில நுண் நொடிகளில் கடந்துசெல்லும் அதனை கேமசரியால் உடனே தெளிவாகக் கணிக்கமுடியாமல் போனது. இத்தகு பெரிய ஒளிபந்தின் குறுக்கீடானது எதேச்சையாக நடந்தவொன்றாகக் கருத முடியவில்லை. ஆய்வகத்தின் சூழ்நிலையைப் பொறுத்தவரை எதிர்பாராமல் நடக்கும் எதுவொன்றின்மீதும் அர்த்த இடையீடுகள் புரிவதற்கு அவனின் அறிவு எப்போதும் காத்திருந்தது. தவிர இதுபோன்ற ஒளித்திரள்கள் ஒவ்வொன்றுக்கும் வானியல் விதிப்படி ஒவ்வொரு அர்த்தங்கள் உண்டென்பதாலும், அதைத் தெரிந்துகொள்ளவேண்டிய பொறுப்பும் அவனுடையதானது.

சமீபத்தில்தான் ஏரிஸ் என்ற பத்தாவது கோளினைக் கண்டறிந்த களிப்பினில் பூரித்துக்கொண்டிருந்த வெளிநாட்டுப் பத்திரிகைகள், அதுகுறித்து மேலதிகமான தகவல்களை வேண்டுமென்றே தாமதப்படுத்தி வெளியிட்டுக்கொண்டிருந்தன. அது இன்னும் சில மாதங்களில் நடைபெறவிருக்கும் பன்னாட்டு வானியல் ஒன்றியத்தின் கூட்டத்தில் தங்கள் பெருமையைப் பறைசாற்றும் விதமாக நாசா தயாராகிக்கொண்டிருந்ததையும் சொல்லாமல் சொல்லியது. அதீத தொலைவிலிருக்கும் ஏரிஸ் குறித்து பிரத்தியேகமான வேறெந்த தகவல்களையும் எளிதில் அறியமுடியவில்லை. கேமசரியின் ஆய்வுகள் அங்கிருந்துதான் சூடுபிடித்தன. ஏரிஸ் மட்டுமல்ல அதைத் தாண்டியும் கண்டறியப்படாமல் சுழன்றுகொண்டிருக்கும் கிரகங்களோடு தொடர்புகொள்ள வேறு ஏதேனுமொரு மாற்றுவழியினை வருணும் கேமசரியும் யோசித்தாக வேண்டுமெனத் தீர்மானித்துக் கொண்டனர். அந்தக் கணக்கீடுகள் மாற்றுப்பாதையின்மீது மட்டுமல்ல, விரைவான பாதையைத் தேடும் மும்முரத்திலும் ஆர்வம் காட்டியது. இந்திய ஆய்வகத்தில், குறிப்பாக கேமசரியின் ஆய்வகத்தில் அந்தளவுக்கான அதி-தொலைநோக்கிகள் இன்னும் பயன்பாட்டிற்கு வரவில்லை. புதிர்கள் நிரம்பிய பூடகமாகப் பூமியைத் தாண்டிய பிரபஞ்ச வெளி தொலைநோக்கியின் கண்களுக்கும் உண்மையைச் சொல்ல மறுத்தது. வெட்டவெளியை நிராதரவாய் வெறுமனே வெறித்துக்கொண்டிருந்த கேமசரிக்குச் சரியாக இரண்டு மாதங்கள் கழித்து இன்றுதான் நேர்மறையான சமிக்ஞையொன்று கிடைத்திருக்கிறது.

ஏதோ அதிசயமான வெளிச்சத்திரளாக இருக்கலாமென்று நினைத்துக்கொண்டிருந்த வேளையில், சரியாக ஒன்பது நாட்கள் கழித்து கேமசரிக்கு மீண்டும் அந்த ஒளிப்பந்தானது நிமிடங்களில் காட்சியளித்து மறைந்தது. இந்த முறை தன் அவதானிப்புகளின் கூர்மையால் கூடுதலாகச் சில குறிப்புகளும் கிடைத்தன. ஆனால் முன்பு கண்டதுபோல் இந்த ஒளிப்பந்தானது சற்று வெளிச்சம் மங்கியிருப்பதை கேமசரி கவனித்தான். அதிர்ஷ்டவசமாக அடுத்த மூன்று நாட்களில் இன்னொரு ஒளிமுகம் தெரிந்து மறைய, அதன் நிறக்கற்றையையும், அடர்த்தியையும் தோராயமாகக் குறித்துக்கொண்டான். அவனுக்கு ஒரு விசயம் தெளிவானது. தென்படும் வளையங்களின் ஒளிரும் திறனில் காணப்படும் மாற்றங்களையும் அதன் வெவ்வேறு வகையான நிறத் தோற்றத்தின் அடிப்படைகளையும் வைத்துப் பார்த்தால், அவன் தொலைநோக்கியை கடந்துசெல்வது ஒன்றல்ல, பல்வேறு எண்ணிக்கையிலான ஒளிப்பந்துகள் என்று. கேமசரி உடல் சிலிர்த்துப்போனான். ஆனால் படம்பிடிக்கப்பட்ட பகுதிகளைச் சராசரியாகக் கவனித்தால் அதன் நடுப்பகுதியில் நிறம் குறைந்தும் சுற்றியுள்ள விளிம்புகளில் வெள்ளை நிறத்தில் வளையம்போல் பிரகாசமாக இருந்ததால், இதுகுறித்து எளிதில் அவனாலும் ஒரு முடிவுக்குவர இயலவில்லை. ஏதோவொன்று தொந்தரவு செய்தபடி அவன் எண்ணங்களைச் சீர்குலைத்தது. எந்தவிதக் கணக்கீடுகளுக்கும் உடன்படாமல் பிரபஞ்சத்தில் இதுபோல் அலைவுறும் ஆற்றலின் தேவை என்னவென்று யோசிக்கலானான். கணிக்கமுடியாத நேரத்தில் தோன்றிடும் அந்த ஒளிமுகங்களைப் புரிந்துகொள்ள கேமசரி மேலும் சில தேற்றங்களையும், புத்தகங்களின் குறிப்புகளையும் பயன்படுத்த வேண்டியிருந்தது. பெரும்பாலும் இரவுநேரத்தில் தனித்து அடையாளம் காணத் தகுந்ததாக இருக்கும் அவற்றை இரண்டு நாட்களுக்குப் பிறகு கிழக்குத் திசையில் மீண்டும் தெளிவாகக் காணமுடிந்தது. இதுதான் என்று எந்தவிதச் சுட்டிக்காட்டுதலும் இல்லாமல் வெறுமனே வெட்டவெளியில் திடீரெனத் தோன்றவிருக்கும் தற்செயல் கணத்திற்காக நாட்கணக்கில் காத்திருக்கும் அச்செயல் இருப்பதிலேயே சலிப்பானதுதான் என்றாலும் கேமசரிக்கு அந்தச் செயலின்மை நீண்டநேரமாக ஒரு சிந்தனையைத் தனக்குள் அசைபோடுவதற்கு வசதியாக அமைந்துவிட்டது. ஆகப்பெரிய கரும்பலகையைப் போல் கரிய வானம் வியாபித்திருக்கையில் தொலைநோக்கியின் கண்கள் மீண்டும் அந்த ஒளிவளையத்தை நோக்கித் தூண்டிலிட்டுப் பொறுமையுடன் காத்திருந்தன. இந்தமுறை மிகவும் மெதுவாக நிதானமாக, கிட்டத்தட்டப் பூமியின் சுற்றுப்பாதைக்குச் சற்று நெருக்கமான தொலைவில் ஒரு ஒளிமுகம் நகர்ந்து சென்றது. குறைந்த திசைவேகத்தில் செல்வதனால் இந்த முறை அதைக் காட்சிகளாகப் படியெடுப்பதும், அதன் தோற்றங்களை ஆய்வுசெய்வதும் இலகுவானதால் தற்காலிகமாகவேனும் சில முடிவுகளுக்கு அவனால் வரமுடிந்தது. வெகுநேரமாய் அந்த பிம்பங்களை உற்று நோக்கியவன் Converting holes என்ற முதல் சந்தேகத்தை அழுத்தமாகத் தனக்குள் உச்சரித்துக்கொண்டான்.

காரணங்களைப் பின்தொடர்ந்து ஏமாற்றமடைவது கேமசரிக்கு ஒன்றும் புதிதல்ல. ஆனாலும் அவன் கையிலிருக்கும் நிஜத்தினை நேரில் கண்டதற்குச் சாட்சியாக இப்போதைக்கு அங்கே அவன் மட்டுமே இருந்தான். அவன் நம்பிக்கையை மேலும் வலுவூட்ட இயந்திரங்கள் குரலிட்டு அழைத்தன. சற்றுமுன் தான் வானில் கண்ட ஒளித்திரளை நகலெடுத்த கருவியானது காகிதங்களில் அச்சிட்டு வெளியே நீட்டியது. கேமசரி அந்தப் பிம்பங்களையெல்லாம் தொகுத்துப் பார்த்தான். அதில் தெரிந்ததோ எந்தவிதக் கலப்படமும் இல்லாத ஒரு பிரகாசமான முகம். பிரகாசங்களை மட்டும் தன்னுள் நிறைய கண்ட முகம். காகிதத்தின் புறப்பரப்பைத் தன் கைகளால் வருடிக்கொண்டான். வெளிச்சம்தான் எல்லாவற்றையும் தன்னுள் அடக்கவல்லது. வெளிச்சம்தான் தன்னை நோக்கிச் சந்தேகிக்காதவாறு காட்டிக்கொள்வது. வெளிச்சமே எல்லாவற்றின் நுழைவாயில். வெளிச்சமே எல்லா இருளிலிருந்தும் வெளியேறும் வாயில். நிச்சயமாக இதை முன்பே எங்கோ கண்டிருக்கிறான். மீண்டும் அவனுக்கு Converting holes பற்றிய ஞாபகம் மேலெழுந்தது. ஏனெனில் விண்வெளியில் மிதக்கும் Converting holes போன்றவை ஆய்வுலகில் பெரும் பரபரப்பைக் கிளப்பிய கருதுகோளாகும். ஆனால் தான் கண்டது அந்தவகைத் துளைகள்தானா என்கிற குழப்பமும் அவனுக்குள் சுழன்றது. பற்றிக்கொள்ள ஏதேனும் பிடிமானம் கிடைக்க நேரத்தை இரக்கமின்றி அசைபோட்டவனின் முன்னே சுவரில் தன் பேராசிரியரின் புகைப்படம் சற்று உருபெருத்துக் காட்சியளிக்க, சட்டென்று அவனுக்கு எல்லாம் ஒளிர்ந்து விரிந்தன. உள்ளறையில் தன் பேராசிரியரின் அலமாரியில் அவரின் ஆய்வேடுகளையெல்லாம் பரபரப்பாய் எடுத்துச் சரிபார்த்தான். எல்லாம் முறையற்றுக் கலைந்திருந்தன. கேமசரியின் பேராசிரியர் சிறு சிறு காகிதங்களையும் ஆவணப்படுத்தி வைத்திருந்தார். அவசர அவசரமாக அவன் மேய்கிற ஒவ்வொரு பக்கங்களும் அவனின் இடைவிடாத முயற்சியின் விளைவுகளை நோக்கி கவனமுடன் அழைத்துச் சென்றது. பிறகு அலமாரியின் மேலே பழுப்புநிற அட்டையிட்டவோர் ஆய்வேட்டை எடுத்துப் புரட்டிப் பார்த்துக்கொண்டிருந்த கேமசரி அதன் பின்னட்டையில் Converting holes என்று ஆங்கிலத்தில் எழுதி அதற்கு நேராகத் தமிழில் “திறன் மாற்றுத் துளைகள்” என்று குறிப்பிடப்பட்டிருந்ததை வாசித்தான். எதேச்சையாக வரித்துக்கொண்ட ஒரு இலக்கானது அதிசயமாய் எதையோ எதிர்பார்த்தபடி அவனை நோக்கியே வருவதுபோலொரு உணர்வு. எல்லாம் ஏற்கனவே திட்டமிட்ட ஒன்றோ எனச் சந்தேகப்படும் அளவிற்கு அவன் காண்கிற தற்செயல்களின் வருகைகள் இயல்பாகியிருந்தன. அந்த நிமிடத்திலிருந்து மனதளவில் கேமசரி இன்னும் சில ஆய்வுகளுக்குத் தயாரானான்.

வானில் தனித்தலையும் இதுபோன்ற உருவங்களை இதற்கு முன்னரே கண்காணித்து வைத்திருந்தவர்களின் ஆராய்ச்சி முடிவுகளை வரிசையாகப் பார்த்துக்கொண்டிருக்கையில், தனது பேராசிரியரின் மற்றொரு சிவப்புநிற அலமாரி நினைவுக்கு வந்தது. அங்கிருக்கும் மேத்யூவின் புத்தகங்களும் நினைவுக்கு வந்தது. அவனுக்கு அந்நேரம் ஏன் இந்த புதிருக்கான விடையை மேத்யூவின் கொள்கைகளிலிருந்து தேடக்கூடாதெனத் தோன்றியது. சற்று சிக்கலான காரியம்தான். ஏனெனில் மேத்தியூவைப் பற்றி கேமசரியின் பேராசிரியர் பலமுறை கூறியிருக்கிறார். மேத்தியூவின் தர்க்கங்கள் எப்போதும் நியதிகளுக்கு அப்பாற்பட்டு நிற்பதிலேயே தீவிரம் காட்டும். ஆகவேதான் அவரின் பல கருத்துக்கள் வெறும் அனுமானங்கள் என்று புறந்தள்ளப்பட்டிருக்கிறது. மேத்யூ ஒரு தாலமியின் வாரிசு எனக் கேலிசெய்து உலகமே அவரைப் புறந்தள்ளினாலும், அவரின் புத்தகங்கள் எல்லாம் புனைச்சுருட்டுகள் என்று நான்கு ஆண்டுகளுக்கு முன்பே மேற்குலக நாடுகளால் தடைசெய்யப்பட்டிருந்தாலும், கேமசரியின் பேராசிரியருக்கு அவர்மீது தனிப்பட்ட முறையில் மரியாதை இருந்தது. அதேசமயம் மேத்யூவைப் புறக்கணிப்பதற்கு ஏராளமான வாய்ப்புக்களை அவரே உருவாக்கி வைத்திருந்தார் என்பதும் மறுக்கமுடியாதொரு உண்மை.. சூரியக் குடும்பத்தின் புற அமைப்பை அவ்வப்போது பழைய கண்ணோட்டத்தில் புவிமையமாகக் கற்பனை செய்து பார்த்தவர் மாத்யூ.. ஒரு கோளானது தன்னைப் போன்ற மற்றொரு கோளுடன் தொடர்புகொள்ள இயற்கையாகவே தமக்குள் ஏகப்பட்ட ஊடகங்களை விண் பரப்பானது உருவாக்கி வைத்திருப்பதெனக் கூறிய மேத்யூ, அத்தகைய தொடர்புகளின் மூலம் ஒரு கிரகத்திலிருந்துகொண்டு இன்னொரு கோள்களின் சுற்று வட்டப்பாதையையும், அந்தக் கோள்கள் சுழலும் வேகத்தையும்கூடக் கட்டுப்படுத்த முடியும் என்றெல்லாம் கட்டுரைகளை வெளியிட்டு ஆய்வுலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியவர். அந்த வரிசையில் சில ஆற்றல்மிக்க கதிர்கள் வான் பரப்பை எளிதில் கடப்பதற்கும், அதன் பயணத்தை எளிதாக்கவும் சில ஆற்றல் துளைகள் உதவக்கூடும் என்பது அவரின் நம்பிக்கைகளில் ஒன்று. அதில் சிலவற்றில் ஒளிக்கற்றைகள் பயணிக்கவும், சிலவற்றில் மனிதர்கள் பயணிக்கவும் வாய்ப்புகளுண்டு.

அவரின் கூற்றுப்படி, “மற்ற கிரகங்களைப் போலின்றி பூமியின் சுற்றுவட்டப் பாதையைச் சுற்றி சில வெண் துளைகள் பல பகுதிகளில் தென்படுகின்றன. இவற்றில் தொலைவிலிருக்கும் துளைகள் சிலவற்றை நட்சத்திரங்கள் என்றும் சிலர் கருதிக்கொள்வதுண்டு. ஆனால் இவை அதிக ஆற்றல் ஓர்மைகளை தன்னுள் அடக்கிய வாயில்களாகும். இதன் வழியாக மனிதர்களோ விண்கலங்களோ பயணிக்க முடியாது. இது வெறுமனே ரேடியோ அலைகள் அல்லது சூரிய ஒளிக்கற்றைகள் போன்ற சில மின்காந்த அலைகள் மட்டுமே பயணிக்கும் பிரத்தியேக ஊடகமாகும். அதாவது சூரியனின் கதிர்கள் சிலசமயத்தில் அதிக ஆற்றலுடன் பூமியின் துருவங்களை அடைந்து பாதிப்படையச் செய்வதைக் காணலாம். அந்தச் சமயத்தில் அக்குறிப்பிட்ட கதிர்களாவன இதுபோன்ற திறன் மாற்றுத் துளைகளைப் பயன்படுத்தியே பூமிக்குள் அதிக திறனோடு வந்திருக்க வேண்டும், அவ்வாறு இந்தத் துளைகளின் வழியே உட்புகும் அலைகள் தன் ஆற்றலில் பெரிதளவிற்குச் சிதறல்களையும், விளைவுகளையும் சந்திக்காமலேயே அதிக அலைநீளம் பெற்றுவிடுவதாக மாத்யூ குறிப்பிடுகிறார். இதுபோன்ற ஊடகங்களைக் கண்டறிந்து அதனூடாகச் செலுத்தும் மின்காந்த அலைகளால் சூரியக் குடும்பத்தின் எல்லையைத் தாண்டியும் பயணிக்க வைக்க முடியும்,” என்பதே அவரின் கட்டுரையின் முடிவு.

இருப்பினும் அலைநீளம் பெருகும்போது ஆற்றல் குறைந்து, அதன் அலைவீச்சானது மாற்றமடையலாம் எனத் துவக்கத்தில் இதற்கு மறுப்புகளும் எழுந்தன. ஆனால் வெற்று ஊடகத்தில் பயணிக்கும் அலைகளில், குறிப்பாக மின்காந்த அலைகளில் ஆற்றல் மாற்றம் நிகழ வாய்ப்பில்லையென மேத்தியூவே மீண்டும் விளக்கமளித்திருந்தார். தவிர, அந்தக் கட்டுரையில் மேத்தியூ தான் கண்டறிந்த ஒளித்துளைகளை அவற்றின் அலைவரிசைகளின் அடிப்படையிலும் அடையாளப்படுத்தியிருந்தார். அதாவது வான்வெளியில் தென்படுகிற திறன் மாற்றுத் துளைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு குணாதிசயம் கொண்டதாக அதில் வரையறை செய்திருந்தார். மேலும் எங்கெல்லாம் வெளியில் இதுபோல் ஆற்றல் ஓர்மை நிகழ்கிறதோ அங்கெல்லாம் இதுபோன்ற ஒளித்துளைகள் உருவாகவும் வாய்ப்புகளுண்டு. அத்தகைய அதீத ஆற்றல் ஓர்மைகளால் தனித்தனியே உருவாகும் அந்த ஒளித்துளைகள் அனைத்தும் ஒன்றைப்போல் ஒன்றில்லாமல் சற்று மாறுபட்ட விளைவுகளை உண்டாக்கக் கூடியவை என்பதால் சில அதீத ஓர்மை கொண்ட துளைகள் வழியாகச் செல்லும் அலைகள் அவை சென்றடையும் இலக்கின்மீதே சில மாற்றங்களை உண்டாக்கவல்லது என்று குறிப்பிட்டிருந்தார். அதாவது இதுபோன்ற துளைகள் வழியாகச் சில மீ-ஆற்றல் அலைகள் உட்புகுந்து செல்கையில் அவற்றின் திறன் மாற்றமடைந்து இறுதியில் அது சென்றடையும் குறிப்பிட்ட கோளின்மீதோ அல்லது நட்சத்திரத்தின் மீதே விளைவை உண்டாக்கி அவற்றின் செயல்படு வேகத்தை அல்லது இயல்பினை மாற்றியமைக்கவும் வாய்ப்பிருக்கிறது என்றிருந்தார். ஆனால் மேத்யூவின் இந்த நிரூபணமற்ற விளக்கமே அவரின் கூற்றுகளைப் பலரும் நிராகரிக்க வழிகோலியது. மேத்தியூ எந்தவிதமான உகந்த ஆதாரங்களையும் பின்பற்றாமல் வெறுமனே தனது ஊகங்களையும், தானே வடிவமைத்த சில கணிதத் தேற்றங்களையும், அவரின் ஆய்வகத்தில் எடுத்ததாகச் சில படங்களை மட்டும் வைத்துக்கொண்டு அவற்றையே கோட்பாடாக மாற்ற முனைகிறார் என்று குற்றம் சாட்டப்பட்டார். இருப்பினும் மேத்தியூ தொடர்ந்து வானியல் வெளியில் அவ்வப்போது நிகழும் சிறு சிறு மாற்றங்களையும் சந்தேகத்திற்குரிய இருப்புகளைக் கண்டறிந்து அதற்கு விளக்கமளித்து எழுதிய “Unbelievable facts in the space” என்ற புத்தகமானது இன்றளவும் ரகசியமாகப் படிக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது. பேராசிரியருக்குத் தெரியாமல் அவ்வப்போது அதையெடுத்துப் படித்துக்கொள்ளும் கேமசரியும், வருணும் அப்புத்தகத்தைக் குறித்து மாதக்கணக்கில் பலமுறை உரையாடியதுண்டு. மேலும் ஆய்வகத்தில் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டிருக்கும் எல்லாப் புதிர்களையும், என்னவென்று உறுதியாக ஒரு முடிவுக்கு வரமுடியாத சூழ்நிலையில் அந்த ஒளிவளையங்களை ஏற்கனவே உண்மையென்று ஒப்புக்கொண்ட மேத்யூவின் வார்த்தைகளை நம்பிப் பின்தொடர்வதைத் தவிர இப்போதைக்கு அவனுக்கும் வேறு வழியில்லை. அதுவே கேமசரி தனது ஆய்வுகளை அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்வதற்கான உகந்த உபாயமென்றும் நம்பினான். ஆனால் மேத்யூவின் தேற்றங்களைக் கணினியின் நிரல் வழியே செயல்படுத்தும் திறன் கேமசரியைவிட வருணுக்குத்தான் அத்துப்படி. தற்சமயம் கேமசரி பயன்படுத்திக்கொண்டிருக்கும் ஒலி சைகைகளைக் கணித்து அது எங்கிருந்து வருகிறது என்பதையும், தோராயமாக அந்த மூலத்தைப் படமாக வரைந்துகாட்டும் இந்தக் கருவிகூட வருண் செய்ததுதான். இதற்குமேல் இந்த ஆய்வினைத் தன்னந்தனியாக முன்னெடுக்க முடியாதென்பதையும் புரிந்துகொண்ட கேமசரி முதல் வேளையாக வருணை விரைந்து ஆய்வகத்திற்கு வருமாறு செய்தியனுப்பினான்.

***

ஒப்புக்கொள்ளப்படாதவரை எந்த யோசனைகளும் உண்மையென்கிற ஸ்தானத்தை அடைவதில்லை. முழுமையான ஆதாரங்கள் இல்லாவிடினும் மேத்யூவின் கொள்கைகளை உடனே தான் ஏற்றுக்கொண்ட செயல் கேமசரிக்கும் ஆச்சரியமாக இருந்தது. நிமிர்ந்து நோக்கினான். அறையின் கண்ணாடிச் சுவர்வழியே வருணின் முகம் கோபமாக ஆய்வத்திற்குள் நுழைவது தெரிந்தது. நினைத்தாற்போலவே ஆவேசமாக உள்நுழைந்த வருண் தன் கையிலிருந்த காகிதங்களை அவன் முகத்தை நோக்கி வீசியெறிந்தான். அவற்றில் ஒன்று வருணின் ஜாதகம், மற்றொன்று பார்கவியின் ஜாதகம். கேமசரிக்கு விபரம் புரிந்துவிட்டது.

அன்று வருண் ஆய்வகம் வந்திருந்தபோது தன் கையோடு எடுத்துவந்திருந்த ஜாதகங்களை வாங்கிப் பார்த்துக்கொண்டிருந்த கேமசரி விளையாட்டுத்தனமாய்க் காலியாக இருந்த பார்கவியின் கட்டங்களில் ஏழாவது இடத்தில் சந்திரன் என்றும், வருணின் ஜாதகத்தில் ஒன்பதாம் இடத்தில் சுக்கிரன் என்றும் எழுதிவைத்ததை இப்போது வருண் எப்படியோ கண்டுபிடித்திருக்க வேண்டும். வருணுக்கு மரபார்ந்த பழக்கவழக்கங்கள் மீது எப்போதும் ஒரு பிடிப்புண்டு. நம்பிக்கைகளுக்குட்பட்ட விஷயங்களையே அவன் திடமாகச் செய்யத் துணிவான். மேலும் அவ்விருவரும் ஒரே வயதொத்த ஆய்வாளர்கள், ஒருவரின் அறிவை ஒருவர் மறுத்துப் புரிகிற ஜாடைப்பேச்சுக்களும், கேலியும் அவ்வப்போது அங்கு நிகழக்கூடியதே. சென்றவாரம்கூட வருண் ஒரு நிரல் வடிவமைப்பில் வேண்டுமென்றே கேமசரிக்குத் தவறான ஆணைகளைச் சொல்லிக்கொடுத்து பேராசிரியரிடம் மாட்டிவிட்டிருந்தான். இவ்வாறு இருவருக்குமே தீர்க்கவேண்டிய பழைய கணக்குகள் பல இருந்தன. ஆனால் அவன் இல்லாத இந்நாட்களில் தான் புரிந்த பரிசோதனைகளைத் தெரிவிக்கும் மனநிலையிலிருந்த கேமசரி முடிந்தவரை இந்தச் சண்டையை மட்டுப்படுத்தவே முயன்றான்.

“இதில்கூட உனக்கென்ன விளையாட்டா..? இப்ப பார், பார்கவியின் ஜாதகத்துல ஏதோ வக்ர பெயர்ச்சியாம். அவுங்க வீட்ல எல்லாரும் நம்பிட்டாங்க,” என்றான் சீற்றத்துடன்.

கேமசரியோ பொறுமையாக எழுந்து அவனைச் சமாளிக்கத் தயாரானான். எப்படியிருந்தாலும் வருணின் ஜோதிடர் இவ்விரண்டையும் பொருத்தமற்ற ஜாதகம் என்று சொல்லியிருக்க வாய்ப்பில்லை. தவிர வருண் சொல்வதை வைத்துப் பார்த்தால், ஆறு மாதங்களுக்குப் பிறகு நடக்கவேண்டிய ஜன்ம விதிப்பயனின் சில பலாபலன்களை விரைந்து முன்பே நடக்கும்படி மாற்றி வைத்திருக்கிறான். சொல்லப்போனால் இவன் அவனுக்கு மறைமுகமாக உதவிதான் புரிந்திருக்கிறான். மேலும் வருணை நோக்கிச் சற்று நக்கலான தொனியில், “கிரகங்களை நாம மாத்தி வைக்காட்டியும், எப்படியும் அதுவே இடம் மாறிக்கும்தானே வருண். பெயர்ச்சி ஆனாலும் ஆகாட்டியும் நல்லது நடந்தா சந்தோஷம்தானே.”

கேமசரியின் இந்த அலட்சியமான பதில் அவனை மேலும் சினமூட்டியது. “உனக்கு எல்லாமே ஈசியா போச்சில்ல. ஒருத்தரோட நம்பிக்கைய சீண்டிப் பாக்குறதுல அப்படி என்ன சந்தோஷம் உனக்கு?” என்று கூறிய வருணை நோக்கிச் சிரித்துக்கொண்டே பதிலளித்த கேமசரி, “கொஞ்சமேனும் படித்தவனாக பேசு வருண், உன்னோட ஜோசியர் உத்தரவு கொடுக்கலனா கல்யாணமே செஞ்சுக்க மாட்டியா என்ன. நம்பிக்கைங்கற பேர்ல எல்லா பழமைவாதத்தையும் சரினு ஏத்துக்காதனு சொல்றேன். அவ்ளோதான். மத்தபடி இத விளையாட்டுக்காகத்தான் எழுதிவச்சேன். முன்திட்டமெல்லாம் எதுவும் இல்ல. Sorry,” என்றதும் வருண் மேலும் கொந்தளித்தான்.

இதுபோன்ற கேலிப்பேச்சுகளுடன் அவன் முன்பே பலமுறை மல்லுக்கட்டியிருக்கிறான். விசயம் அவனின் அறிதல், அறியாமை குறித்ததல்ல. தற்காலிகமானது எனத் தெரிந்திருந்தும் மேற்கொள்ளும் ஒருவனின் நம்பிக்கையைப் பற்றியது. ஒன்றை முன்னமே கணித்துக்கொண்டு அதுதான் நடக்கும் என்று எதிர்பார்த்துக் காத்திருப்பதல்ல இது. மாறாக எப்படியும் இந்த நிலை கூடிய விரைவில் மாறிவிடும் என்று ஆறுதலுக்காகப் பற்றிக்கொள்ளும் ஒருவனின் உளவியலைப் பற்றியது. அவனுக்கு விருப்பம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவன் வாழும் குடும்பச் சூழலுக்காகவேனும் இதைப் பொருட்படுத்தவேண்டியவனாகிறான். அதை கேமசரியும் அறிவான். ஆனால் சமயத்தில் எந்தவித நிரூபணங்களும் இல்லாமல் வெறும் கணிப்புகளை ஏற்றுக்கொள்வது குறித்துதான் இருவருக்கும் பெரும்பாலும் முரண்கள் உண்டாகும்.

“Hey wait, அதென்ன பழமைவாதம்….? உனக்கு ஒவ்வாத எல்லாத்தையும் மூட நம்பிக்கைனு சொல்லிருவியா…? வழிவழியா வர சில பழக்கங்கள்கூடக் காலப்போக்குல காலாவதி ஆகிரும்தான். மறுக்கல. ஆனா அதேநேரத்துல மனுசனால நூறு சதவீதம் புதுமையா மாறிட முடியுமா என்ன…? போனவாரம்கூட கேம்ப் போய்ட்டு வந்தோமே அந்தப் பழங்குடி ஏரியாவுக்கு, ஈர உடைல எல்லோருமா சேர்ந்து மழை வேண்டி நடத்துனாங்களே ஒரு சடங்கு ஞாபகமிருக்கா…? அவங்ககிட்ட போய் சொல்லுவியா இதே வசனத்த..? வலுவான நம்பிக்கைக்கு எப்பவும் ஒரு விளைவிருக்கு கேமசரி. அது பல சமயத்துல நடக்காமையும் போகலாம். ஆனால் என்னிக்காவது ஒருநாள் நிச்சயமா நடந்துரும்னு காத்திருக்கப் பொறுமை இல்லாதத மறைக்க இன்னொருத்தர கேலிசெய்ற.”

சண்டையிடும் மனநிலையில் இல்லாவிட்டாலும் கேமசரியும் விடாமல் நின்றான்.
“என்னிக்காவது ஒருநாள் பலிக்கும்னா அது எதேர்ச்சை. உன்னோட ஜோசியர் சொல்றதெல்லாம் ஒரு ராசிய ஒத்த எல்லாருக்கும் சொல்ற பொதுப்பலன்கள்தானே தவிர, அத தனிப்பட்ட முறையில ஒருத்தனுக்குச் சொன்னதா எடுத்துக்க முடியாது.”

“சரி என்னோட கேள்விக்குப் பதில் சொல்லு. பூமியோடு சம்பந்தப்பட்ட மத்த கோள்களோட சுழற்சியோ செயல்பாடோ பூமியோட நிலையில எந்த மாற்றத்தையும் உண்டாக்காதுனு சொல்றியா…?”

கேமசரி சட்டென்று விடையளித்தான். “ஏன் முடியாது. பௌர்ணமி, அமாவாசை நாள்ல கடல் கொஞ்சம் தினுஸா நடந்துக்குது இல்லையா. அந்த வகைல பிரபஞ்ச வெளில சீராக இருக்குற மத்த கோள்களோட செயல்பாடு பூமிமேல மறைமுகமாகவாவது ஒரு தாக்கத்தை உண்டுபண்ண வாய்ப்பிருக்கு.”

“சரி, அப்படி வெளில இருந்த உண்டாகுற மாற்றங்கள் இந்தப் பூமியோட சூழல்ல ஒரு விளைவை உண்டாக்கும்னு சொன்னா, அந்தச் சூழல் உன்மேலயும் ஒரு தாக்கத்தை உண்டாக்க வாய்ப்புண்டா..?”

கேமசரி மேலும் யோசித்து, “நிச்சயமாக” என்றான். சமயத்தில் மழை நன்றாகப் பெய்யும் இரவுகளில் அவனுக்கு உறக்கம் கொள்ளாது. அல்லது வெக்கை அதிகமாக இருக்கும் சில நாட்களில் அவனுக்கு எழுத, படிக்க எதுவும் தோன்றாது.

“ஆக உன்னோட சூழல் உன்னோட மனநிலைய தீர்மானிக்கற அளவுக்கு செயல்படுதுனு நீயே ஒத்துக்குற இல்லையா…? அறிவியல் பூர்வமா இங்க நாம செய்ற ஆராய்ச்சி எல்லாம் பூமியோட தொடர்புடைய மத்த கிரகங்கள பொருட்படுத்தியும், பூமிக்குள்ளயே பூமியினால உண்டாகுற சூழல எப்படி கண்காணிக்கிறோமோ, அதுபோல ஜோசியம் அந்தச் சூழல வச்சி ஒருத்தனோட சூழ்நிலைய கணிக்குது அவ்ளோதான். அதுல பத்து பொய்க்கு நடுவுல இரண்டு உண்மை இருக்கலாம். ஆனா எல்லாமே நிகழ்தகவுதான்.”

“அப்படினா இந்த அறிவியல் இருக்குற எல்லா நம்பிக்கைகளையும் ஒரு நிகழ்தகவுல கொண்டுவந்து நிறுத்திவைக்குதுனு சொல்ல வறியா?” என்றுசொல்ல வாயெடுத்த கேமசரி பின் சண்டையை வளர்க்க விரும்பாதவனாய், அவன் கூறுவதை உண்மையென்று ஒப்புக்கொள்ளாவிட்டாலும், இப்போதைக்கு அங்கே அவனது இந்தப் பதிலை ஏற்றுக்கொண்டு மௌனமாக நின்றிருந்தான். இந்த வாதத்தில் கேமசரியும் விடாப்பிடியாய் நிற்பதற்கு ஒரு காரணமுண்டு. வருணின் வற்புறுத்தலினால்தான் கேமசரி தன் அம்மாவின் ஜாதகத்தைத் தந்தனுப்பினான். குருபெயர்ச்சி முடிந்தால் அவள் தன் வாத நோயிலிருந்து மீண்டுவிடுவாள் என்றனர். கேமசரி அதனைப் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை என்றாலும், அந்த வாக்கின் படியேனும் அவள் எழுந்து நடந்துவிடக்கூடுமெனக் காத்திருந்தான். ஆனால் கூறப்பட்ட காலக்கெடு முடிந்தே நாட்களாகின. மருந்துகளோ இன்னமும் அவளைப் படுத்த படுக்கையாகவே கிடத்தியிருந்தது.

சற்றுநேரம் ஆய்வகம் அமைதியானது. கேமசரிக்கோ தான் செய்துகொண்டிருந்த காலதாமதம் அவனை மேலும் பதற்றத்திற்குள்ளாக்கியது. வருணை அழைத்த காரணத்தையும் அவன் இல்லாதபோது ஆய்வகத்தில் நடந்த விசயங்களை அல்லவா அவன் வந்ததும் முதலில் பேசியிருக்க வேண்டும். நேரத்தைக் கடத்தக் கடத்த இந்தப் பிரபஞ்சத்திடம் எதையோ பறிகொடுத்துக்கொண்டிருப்பதாக அவனுக்குள் உறுத்தியது. மிகவும் தயங்கியபடியே தன் ஆய்வுகளை வருணின் முன்னே காட்சிப்படுத்தினான். கடந்த நான்கைந்து நாட்களாகத் தான் செய்துமுடித்த முதல்கட்ட பணிகளையும், அடுத்து செய்யவேண்டிய திட்டங்களையும் வருணிடம் விவரித்து முடித்தான் கேமசரி. ஏதோ புதிய வால்நட்சத்திரம் என்று எண்ணிக்கொண்டு ஒவ்வொன்றையும் பொறுமையாகப் பார்வையிட்ட வருணால் அதைத் துளியும் நம்பமுடியவில்லை.

“நகரும் துளைகளா..?” என்று வினவியவனைத் திருத்தி, “திறன் மாற்றும் துளைகள்” என்றான் கேமசரி.

வருணுக்கு அப்போதும் புரியவில்லை. ஆதாரத்திற்காக அவன் உள்ளே ஓடி மேத்தியூவின் புத்தகத்தை எடுத்து வருவதைக் கண்டவன் மீண்டும் கூச்சலிடத் துவங்கினான். வருணைப் பொறுத்தவரையில் அது இன்னமும் தோல்வியைத் தழுவிய கற்பனைக் குப்பைகள். மேத்யூவின் புத்தகத்தை நம்பி ஆய்வுக்குச் செல்லும் யோசனைக்கு உடன்பட அவனுக்குத் துளியும் விருப்பமில்லை. ஆனால் மேற்கொண்டு எதுவும் பேசுவதற்குள் வருணின் சொற்கள் உறைந்துபோகும்படி கேமசரி எடுத்துவந்து நீட்டிய புகைப்படம் அவன் வாயை அடைத்தது. அத்தகு துல்லியம். சாம்பல் கலந்த வெளிர் நிறத்தில் ஒரு கிரகத்தின் மேற்பரப்பினைக் காண்பிக்கும் படம் அது.

“என்ன இது..? வியாழனா…?” என்று கேட்ட வருணிடம் அதை வியாழனின் துணைக்கோளான கனிமேட் என்பதை நினைவூட்டினான். ஒருகணம் அதனை உற்றுநோக்கிய வருண் கனிமேட் குறித்த இவ்வளவு துல்லியமான புகைப்படங்களை இதற்குமுன்பு எங்கும் கண்டதில்லை.

“இது தூரங்களை அளக்க உதவும் டாப்ளர் விளைவினை அந்த ஒளித்துளைகளின் வழியாகச் செலுத்தித் திரும்பப் பெறப்பட்ட சைகைகளைப் படமாக்கம் செய்ததன் மூலம் பெறப்பட்ட படங்கள்.”

வருண் சட்டென்று பதற்றமடைந்தான். நம்பவே முடியவில்லை அவனால். எனில் திறன் மாற்றுத் துளைகள் ஒரு கற்பனைக் கொள்கை இல்லையா…? தன்னுள் செல்கிற சைகைகளை ஒரு ஊடகம் இந்தளவுக்குப் பாதிக்காத வகையில் நடந்துகொள்கிறது என்றால் அந்தத் துளைகளின் குணாதிசயங்கள் குறித்தல்லவா நமது ஆய்வை மேற்கொள்ள வேண்டும்..? பல ஒளியாண்டுகளைச் சில மணி நேரங்களில் கடந்து வருகிறது என்றால் பின்னாளில் இதுவே ஒரு பெரும் மாற்றத்திற்கான காரணியல்லவா..? இந்த ஆய்வுகளை இன்னமும் செம்மைப்படுத்தினால் அதனுள் மனிதர்களைப் பயணிக்கவைக்கும் திட்டத்தை நோக்கியும் நாம் நகரலாமல்லவா…? என்று தன் எண்ணங்களை அவன்முன் அடுக்கிக்கொண்டே சென்றான்.

ஆனால் விசயம் அவ்வளவு எளிதல்ல. உண்மையில் அவையாவும் நிலையற்ற துளைகள். அந்தத் துளைகள் கிட்டத்தட்ட நமது கிரகங்களைப்போலவே தமது சுழற்சிகளின் வழியாகவும் தமது ஆற்றலை ஒருமுகப்படுத்திக் கொள்கின்றன. மேலும் மேத்தியூவின் கூற்றுப்படி சுழற்சியில் ஈடுபட்டிருக்கும் திறன் மாற்றுத் துளைகள் நூற்றுக்கணக்கில் இருக்கும். அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு குணம் கொண்டவை. ஆய்வுக்கு என்று வைத்துக்கொண்டாலும் மெதுவாக நகரும் துளைகள் மற்றும் மையப்பகுதியில் குறைந்த ஒளி வரிகளை வெளியிடும் துளைகளையே மாத்யூ பரிந்துரைக்கிறார். ஏனெனில் மற்றவற்றைக் குறித்து அவராலும்கூட ஒரு முடிவுக்கு வர இயலவில்லை என்று அர்த்தம். எனவே மேலை நாடுகளிலிருக்கும் வசதிகள் இல்லாத நம் ஆய்வகத்தில் நகரும் துளைகள் குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொள்வதைவிட, இப்போதைக்கு நம்மால் அந்தத் துளைகளைப் பயன்படுத்தி, பல ஒளியாண்டுகளை விரைந்து கடக்கும் சாகசத்தில்தான் ஈடுபட முடியும். மேலும் இதுபோன்று ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட கோள்களைப் பற்றிய தகவல்களுக்குப் பதிலாக இன்னமும் அதிகம் விளக்கப்படாத புளூட்டோ, ஏரிஸ் போன்றவற்றின்மீது கவனம் செலுத்தி இவ்வளவு துல்லியமான படங்களை நமது ஆய்வகம் வெளியிடுமாயின் அதற்கான வரவேற்பு பெரிதாக இருக்கும். அப்போது ஒருவேளை இதற்கான பின்னணியை விளக்கவேண்டி வந்தால் அப்போது நாம் இந்த நகரும் துளைகள் குறித்து ஆதாரங்களுடன் வெளியிடலாம். ஆகவே அதுவரைக்கும் இது ரகசியமாக இருப்பதே நலம் என்று விளக்கி முடித்தான் கேமசரி. ஒருவகையில் வருணுக்கும் அதுவே சரியெனப்பட்டது.

***

அவர்களுக்குத் தாம் செய்கிற எதுவும் புதிதாகத் தெரியவில்லை. ஏனெனில் தேடப்படுவது அனைத்தும் ஏற்கனவே அறிந்தவொன்றிலிருக்கும் விடுபடலைத்தான். விண்கதிர்களின் திறனை மாற்றியமைக்கும் துளைகள் குறித்து எவ்வளவோமுறை அவர்கள் கேள்வியுற்றிருந்தாலும், அதுகுறித்த சந்தேகங்கள் தீர்ந்த புள்ளியிலிருந்தே அவர்களின் நம்பிக்கையும் உயிர்கொண்டது. ஆகவேதான் அவ்விருவரும் இப்போதைக்குத் தென்படும் வினாக்கள் அனைத்தையும் தங்கள் கண்முன்னிருக்கும் விடையை நோக்கி நகர்த்துவதன் வழியாக ஒரு தீர்வை எட்டமுடியுமென்று நம்பினர். அந்த முயற்சிகள் சரியா, தவறா என்பதைப் பற்றி இருவருக்குமே அக்கறையில்லை. முடிவுகளைப் பொருட்படுத்தாமல் ஈடுபடுதலையே ஆய்வுகள் எப்போதும் விரும்புகின்றன. அவ்விருவரின் மனோபலமும் அதற்கான முன்னேற்பாடுகளுடன்தான் தயாராகிக்கொண்டிருந்தன.

குறிப்பிட்ட நேரத்தில் அவர்களின் தேர்வு தவறுதலாக மாறிவிட்டால் அதன்பிறகான விபரீதங்களுக்கு அவர்களே பொறுப்பேற்கவேண்டி வரும். முன்பே கூறியதுபோல் துளைகளை அடையாளம் காணும் விசயத்தில் மேத்யூவிற்கே சில மாற்றுக் கருத்துக்கள் உண்டு. ஏனெனில் திறன்களை மாற்றும் துளைகளில் சில குமிழ் வளையங்களையும் கண்டதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார். அதாவது சில துளைகள் தனக்குள் அனுப்பப்படும் மின்காந்த ஆற்றல் அலைகளை உட்கவர்ந்து தன்னை வடிவில் பெருக்கிக்கொள்ள முயலும். அது ஊதிப் பெருத்து ஒரு குமிழ் வடிவிற்கு மாறிவிடும். அதனால் பாதிப்பென்பது ஒன்றுமில்லைதான். ஆனால் அது வெடிக்கும்பட்சத்தில் சிறிதளவேனும் ஆற்றலானது சிதறடிக்கப்படலாம். இதுவே ஒரேசமயத்தில் பத்துப் பதினைந்து குமிழ்கள் வெடிக்குமென்றால் அதன் பாதிப்பு சூழலை சற்று மோசமாக்கலாம். ஆகையால்தான் மேத்யூவைப் பின்பற்றுகையில் அவரின் கூற்றுகளின் அனைத்துப் புள்ளிகளிலும் கவனமாக இருக்கவேண்டியது அவசியமாகிறது. தவிர திறன் மாற்றுத் துளைகளை அணுகும்போது அதன் ஆற்றல் சேகரமானது அதன்வழியே அனுப்பப்படும் அலைகளைச் சீரழித்துவிடக் கூடாது. ஏனெனில் அதற்கு மையப்பகுதியில் இடைவெளி அதிகமிருக்கும் துளைகளாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். அத்தகைய துளைகள் இயல்பில் மெதுவாக நகரும் தன்மை கொண்டவை என்பதை மாத்யூவின் வரிகளின்மூலம் மற்றொருமுறை உறுதிப்படுத்திக் கொண்டான் கேமசரி. இப்போது செய்யவேண்டியதெல்லாம் பூமியிலிருந்து இலக்கு வைக்கப்பட்ட கோளுக்கு நேராகத் திறன் மாற்றுத் துளைகள் வரும் இடத்தைக் கணித்துச் சரியாக அதே நேரத்தில் அலைகளைப் பிறப்பிக்க வேண்டும். கேமசரிக்குக் கூடுதலாகத் தரவுகளைப் படியெடுக்கும் கணினிகளும், மீ அதிர்வெண்களைச் சைகைகளை உட்கவரும் இரண்டு ஆண்ட்டெனாக்களும் தேவைப்பட்டன. அலைகளாகக் கிடைக்கும் மீ அதிர்வெண் சைகைகளைக் காட்சிகளாகத் தோற்றுவிக்கும் (decode) கருவியில் செயல்திறன் கூடுதலாக இருக்கும்படியான வசதியை முன்னரே சரிபார்த்தான். இதற்கிடையிலும் செய்முறைகளைத் தவறாமல் எழுத்து வழியாகப் பதிவுசெய்வதையும் அவன் மறந்துவிடவில்லை. கேமசரி கண்காணிக்கும் பகுதியில் தொலைநோக்கிகளின் கோண அமைப்பிலும், ஆண்டெனாக்களை நிலைநிறுத்துவதிலும், நகரும் துளைகள் வருகிற பாதைகளைத் தோராயமாகக் கணக்கிடுவதிலும் கவனம் செலுத்த, மறுபக்கம் வருண் சைகைகளை உள்வாங்கும் கருவிகளின் செயல்திறனைப் பரிசோதித்தபடியும், கணினிகளின் இயங்கு முறையைச் சோதனையிட்டபடியும் செயலுக்குத் தயாரானான். நகரும் துளைகளின் மையத்தை இரவுகளில்தான் தெளிவாகக் காணலாம். இலக்கைச் செலுத்தித் திரும்பப்பெற இடையூறுகளும் இல்லாமலிருக்கும். துவக்கம் முதலாகவே வானிலையின் சூழலையும், மேகத்திரளின் அளவையும் சோதிக்கும்படி வலியுறுத்திய கேமசரி வார்த்தைகளை வருண் அரைகுறையாகவே கேட்டுக்கொண்டான். ஆனாலும் வரையத் தயாராகக் காத்திருக்கும் ஒரு ஓவியனின் திரையென வானம் திசையெங்கும் விரிந்திருந்தது. ஒளித்துளைகள் கடந்துசெல்லக் காத்திருந்த கேமசரிக்குத் தென்படும் ஒவ்வொரு நட்சத்திரங்களும் ஒவ்வொரு துளையாகத் தெரிந்தன. கேமசரி அவனைத் தொந்தரவு செய்துகொண்டிருந்த வெளிச்சத்திற்காகக் காத்துக்கொண்டிருந்தான். அதுவோ முழுவதுமாய் துளைவிழுந்த ஒரு பிரம்மாண்டமான திரையாக வானத்தை மாற்றிவைத்திருந்தது.

சரியாக இரவு 6.50 மணிக்கு இருள் படர்ந்த வேளையில் கடிகாரத் திசையில் நகரும் துளையொன்று அவர்களின் முதல் தொலைநோக்கியின் ஆடியைக் கடந்துசென்றது. வருண் எனப் பெயர் சொல்லிச் சத்தமாக எச்சரித்தான் கேமசரி. பதுங்குகுழிகளில் காத்திருக்கும் வீரர்களைப்போலச் சட்டென்று ஆய்வகம் தீவிரமானது. சைகை பிறப்பிக்கும் கருவியில் அதிகபட்ச அளவினைக் கணித்துக்கொண்டு அதைத் தன் கணினியில் குறித்துக்கொண்டு நிரல் வடிவைத் துவங்கிவிடக் காத்திருந்தான். எல்லாச் சீரமைப்புகளும் ஒருமுறை சரிபார்க்கப்பட்டன. கேமசரி லென்சுகளால் ஒளிமுகத்தின் வேகத்தையும் அது சரியாக புளூட்டோ தென்படும் உரிய திசையிலும் பொருத்தி, நகரும் துளைகளாவன அவ்விடத்தை வந்தடைய இன்னும் எத்தனை நிமிடங்கள் ஆகுமெனக் கணக்கிட்டுக்கொண்டிருந்தான். காத்திருந்த கணம் வந்தடைந்தது. இன்னும் ஆறு நிமிடங்களில் தான் குறித்துவைத்திருந்த பாதையை அந்த ஒளிமுகம் கடக்கப் போகிறது என்ற நிலையிலிருக்கும்போது கேமசரி அலைகளைப் பிறப்பிக்க ஆணையிட, அதற்காகவே காத்திருந்த வருண் விரைந்து சமிக்ஞைகளைப் பிறப்பித்தான். இலக்கு வெகுதூரம் என்பதால் அலை வீச்சின் அளவும் அதிகமாகவே இருந்தது. புளூட்டோவின் மேற்பரப்பைத் துல்லியமாகக் கொண்டு வரும் சைகைகளைத் தவிர்த்துச் செலுத்தப்படும் எல்லா அலைகளையும் அவர்கள் பின்பற்றப்போவதில்லை. மிகவும் திட்டமிட்டே மின்காந்த அலைகளைச் சீரான வேகத்தில் முடுக்கியிருந்தனர். எய்யப்பட்ட அம்பொன்று இரையைத் தாக்குவதற்கு முந்தைய கணம்வரை நீடித்திருக்கும் பதற்றம் அந்த ஆய்வகம் முழுக்க நிறைந்திருந்தது. கேமசரி குறித்து வைத்திருந்த நேரத்தைவிட இரண்டு நொடிகள் முன்னதாக குறிப்பிட்ட இடத்தை அடைந்துவிட்ட ஒளிமுகத்தின் வழியாக அனுப்பப்பட்ட அலைகள் எந்தவிதத் தடைகளுமின்றி அதனுள் உள்நுழைந்தது போலொரு பாவனை. ஒரு பெரும் சுமையிலிருந்து விடுபட்டதுபோலொரு ஆசுவாசம். அனுப்பிய அலைகளை நொடிப்பொழுதில் உள்வங்கிக்கொண்டு அதே வானத்தில் ஒன்றும் தெரியாததுபோல் மேற்கு நோக்கிச் செல்லும் துளையை கேமசரி மட்டும் விடாமல் அது மறையும்வரை பார்த்துக்கொண்டிருந்தான். தான் அடையப்போகும் மாற்றங்களைத் துவங்கி வைத்துச் செல்லும் அந்தத் துளையைக் கண்களாலேயே உற்றுப்பார்த்து நினைவில் நிறுத்திக்கொண்டான். இன்னும் ஐந்தாறு மணிநேரத்தில் விடை தெரிந்துவிடும். அல்லது விடியற்காலைகூட ஆகலாம். ஆனால் ஆய்வின் முதற்பகுதி வெற்றிகரமாக முடிந்ததால், இரண்டு பேரும் சற்று நிதானமாக மூச்சு வாங்கினர்.

இருவருக்கும் அன்றிரவு உறங்க வழியில்லை. கேமசரியோ இதுதான் தனது இறுதிநாள் என்பதுபோல் உற்சாக மனநிலையிலிருந்தான். சிரமமுற்று மேற்கொண்ட இந்த ஆய்வுகள் அனைத்தும் சரியான பதிலைப் பெற்றுவிட்டால் தொடர்ந்து நட்சத்திரக் கூட்டங்களையும், பூமிக்கு அருகிலிருக்கும் இன்னொரு கிரகக் குடும்பத்துடனும் மனிதர்கள் தொடர்புகொள்வதென்பது எளிமையாக மாறிவிடும். இருவரும் தகவல்களை நகலெடுத்து ஆவணப்படுத்துவதில் கவனமாக இருந்தனர். வளிமண்டலச் சைகைகளை உட்கவரும் நுண்-திறன் கருவிகளுக்கும் அவர்களைவிடச் செய்ய வேண்டிய பணி நிறைய மிச்சமிருந்தது. உரிய திசையிலிருந்து சமிக்ஞைகள் எதுவும் கிடைத்துவிட்டால் தன்னைத்தானே விழித்தெழச்செய்யும்படி கருவியை முடுக்கிவைத்து இருவருமே காத்திருந்தனர். மறைமுகமாய் எதையோ தாங்கிக்கொண்டிருக்கும் அகண்ட பெருவெளி தனது பருவகால மொழியினால் வழக்கமற்ற கற்பிதத்தை உணர்த்த முற்பட்டது போலிருந்தது. எந்தப் பக்கமும் சேராத வியப்புகளை உள்ளடக்கிய வெட்டவெளி நிகழ்த்தும் திடீர் மாயங்கள் ஒற்றை அர்த்தத்தில் வெளிப்படுவதில்லை என்பதை உணர்ந்தவர்கள் ஆண்ட்டெனாக்கள் பெற்றுக்கொள்ளும் சைகைகளுக்காகக் காத்துக்கொண்டிருந்தனர்.

எல்லாம் ஆங்காங்கே சீரற்றுச் சிதறிக் கிடந்தன. சற்றுமுன் அவர்களுக்குள் சண்டைக்குக் காரணமான அந்த ஜாதக நகல்களை எடுத்துக் குப்பையிலிட்ட வருண் கண்டிப்பான பார்வையில் இவனை நோக்கிப் புன்னகைத்தான். கேமசரிக்கு எப்படிப் பதில் புரிவதென்று அறியாமலிருந்தான். திருமணப் பொருத்தம் பார்க்கச் சென்றவனிடம் தான் அப்படி நடந்திருக்க வேண்டாமெனத் தோன்றியது. ஜாதகங்களின் வழியே தனது வரலாற்றைத் தேடிக் கொண்டிருப்பவர்களில் வருண் வித்தியாசமானவன்தான். அவனோடு சேர்ந்து பார்கவியின் ஜாதகத்திலும் கைவைத்தது அவனுக்கு நெருடலாகத்தான் இருந்தது. ஆனாலும், ஜாதகங்களின் வழியே ஒரு குழந்தை பிறந்தவுடன் அதனை இந்தப் பிரபஞ்சத்தோடு இணைப்பதற்கான புனைவு முயற்சியோ எனவும் தோன்றியது. எந்தச் சூழ்நிலையிலும் இங்கு ஒவ்வொருவரும் இந்த அண்டத்தின் வியாபகத்திற்குள் அதன் ஆதிக்கத்திற்குட்பட்ட புள்ளிதான் என்பதை அவனுக்கு நினைவூட்டிக்கொண்டே இருக்கும் செயல். கிரகங்களின் பார்வையை முன்னிட்டுப் பார்த்தால் இங்கு ஒவ்வொரு மனிதனும் இந்தப் பூமியின் ஒரு மையம்தான் எனவும், இங்கே நடந்துகொண்டிருக்கும் தொடர் இயக்கத்திற்கு அவனால் நடக்கப்போகும் மாற்றங்களும் ஒரு முக்கியக் காரணியாகப் பங்களிப்பதை அவனுக்கே எடுத்துக்காட்டுகிறது. ஸ்தான பலன், தசாப்புத்தி, சஞ்சார நியதி, தோஷம், பரிகாரம், பரிகாரம் எனப் பலவாறான விசயங்கள் வந்துபோனதில் கேமசரியின் கண்கள் தன்னையே மெதுவாக மூடிக்கொண்டது. அவன் பார்வையிலிருந்து அவன் பிரக்ஞையின் தடம் மெதுவாகத் தெளிவற்றுப்போக, மீண்டும் அதே கனவானது உருத்தோன்றத் துவங்கியது. மீண்டும் தானொரு பிரம்மாண்டமான நட்சத்திரமாக ஒளிர்ந்து பெரிதாவதைக் கண்டான். உலகனைத்தும் சென்றடையக்கூடிய பேரொளியை வழங்கும் மையமாகத் தான் மாறியதைத் தன்னையறியாமல் பார்த்துக்கொண்டிருந்தான். இயல்பானது என நினைக்கப்படும் எதுவும் இறுதிவரை ஒரேவிதமாக நிலைத்திருப்பதில்லை. மாற்றங்கள் அனைத்தையும் ஏற்றுக்கொண்டதுபோல் கேமசரியிடம் அப்போது ஒரு புன்னகை தோன்றியதையும் காணமுடிந்தது. அதாவது ஒரு பேரொளியாகப் புன்னகைத்தான்.

திடீரென்று பின்னிரவில் எதிர்பாராத விதமாகக் கருவியிலிருந்து அலாரத்தின் கண்கள் தன் நெற்றியைத் திறந்துகொண்டன. சிவப்பு நிறத்தில் உயிர்பெற்ற விளக்குகள் விரைந்து அனைவரையும் கனவிலிருந்து எழுப்பின. திசையெங்கும் ஒலியும் ஒளியும் பிணைந்து வீசிய விதத்தில், வருண் தனது ஆண்ட்டெனாக்கள் புதிய சைகைகளை எதிர்கொண்டதை உணர்ந்தான். கேமசரி இயல்புக்குத் திரும்ப சில வினாடிகள் ஆயின. கணினிகள் அதற்குள் கிடைக்கும் தகவல்களைப் படியெடுக்கத் துவங்கிவிட்டன. கருவியில் புகுந்திருந்த பரபரப்புக்குக் காரணமான சைகைகளை நகலெடுக்கும் ஆணையும் பிறப்பிக்கப்பட்டாயிற்று. ஆய்வகமே பரபரப்பாயின. ஆண்டாக்களின் கோண அமைப்பில் எதுவும் மாற்றமிருக்கிறதா…? அதன் உள்வாங்கும் திறனின் அளவினை அதிகப்படுத்தலாமா..? சைகைகளின் தன்மையில் மாற்றமிருந்தால் அதில் உகந்த சைகைகளைப் பிரித்துதான் அவற்றைப் படமாக்கம் செய்யமுடியும்..? அதற்குக் கொஞ்சம் அவகாசம் வேண்டும் புரிகிறதா….? வருண் படபடத்த எல்லா கேள்விகளுக்கும் தாமதமாகவே பதிலளித்தான் கேமசரி. அந்த மந்தம் தூக்கம் துண்டிக்கப்பட்டதால் வந்ததல்ல. மாறாகத் தன்னைச் சுற்றிய சூழலில் உண்டாகியிருக்கும் மாற்றங்களை நுகர்ந்துகொண்டிருப்பவனின் நுண்ணுணர்வு அது. அவன் கண்ட முதல் காட்சியே சற்றுமுன்னர் தெரிந்துகொண்டிருந்த நட்சத்திரங்கள் அனைத்தும் மறைந்துகொண்டதுதான். ஒன்றுகூட மிச்சமின்றி அனைத்தும் மேகங்களால் மறைக்கப்பட்டிருந்தன. காற்றின் வீச்சு கொஞ்சம் மரங்களை அழுத்தமாக நகர்த்தியது. வருண் பயத்துடன் வினவினான், ஒருவேளை மழை வருமோ…? வானிலையைப் பரிசோதிக்கும்படி அத்தனைமுறைச் சொல்லியபோதும் வருணின் கவனமின்மை ஆய்வகத்தைப் பதற்றத்திற்கு அருகே நகர்த்தியுள்ளது. காற்றழுத்த மாற்றத்தைக் குறிப்பிட முடியாமல் கருவிகள் தங்கள் துல்லியத்தை மறந்திருந்தன. ஆண்டெனாக்களின் திசையமைப்பை ஒருவேளை மாற்றியமைக்கலாமா என நடுக்கத்தில் ஏகப்பட்ட கேள்விகள் அலைபாய்ந்தன.

கேமசரி மட்டும் உள்ளுணர்வாக அப்போது தொலைநோக்கியில் நோட்டமிட்டான். அவன் காண்பதை அவனாலேயே நம்பமுடியவில்லை. நிச்சயம் இது கனவில்லை. வருண் வருண் என்று பயத்தில் அலறினான் கேமசரி. குறித்துவைத்த நேரத்தில் இலக்கை அடைந்ததும் அலைகள் மீண்டும் வந்த பாதையில் திரும்புகிற இந்நேரத்தில் மேலும் சில ஒளிமுகங்கள் வானில் தென்பட்டன. அது சரியாக தாங்கள் அலைகளை அனுப்பிய அதே பகுதியைக் கடந்து செல்லவிருப்பதைக் கணித்தபின் கேமசரி செய்வதறியாது திகைத்துப்போனான். துளைகள் வழியாகச் செல்லும் சமிக்ஞை எப்படி அதிகத் திறன் கொண்டதாக மாறுமோ அதுபோல திரும்ப வருகிற சமிக்ஞைகளும் இதேபோன்ற துளைகள் வழியாக பூமிக்குள் வருமாயின் அது தாங்கமுடியாதளவு ஆற்றல் கொண்டதாக மாறிவிடலாம். அத்தகைய ஆற்றலை உட்கவரும் சாதுரியத்திற்கு அவர்களின் ஆண்டெனாக்கள் இன்னும் பழகவில்லை. ஒருவேளை அதிர்ஷ்டவசமாக இறுதியில் அந்த ஒளிவளையங்கள் பாதியில் திரும்பிவரும் கதிர்களின் பாதையிலிருந்து விலகிவிடக்கூடுமென்று எதிர்பார்த்த கடைசி நம்பிக்கையும் வீணானது. எல்லாம் கூடிவருகிற நேரத்தில் இதுபோன்றதொரு விபரீதத்தை அவர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை. அவன் எதிர்பார்த்ததுபோலவே புளூட்டோவிலிருந்து திரும்பிக்கொண்டிருந்த சமிக்ஞைகள் சரியான இடைவெளியில் அந்த ஒளிமுகங்களால் இடைமறிக்கப்பட்டன. கேமசரிக்கும் வருணுக்கும் அடுத்து நடக்கவிருப்பது தெரிந்துவிட்டது. அலாரத்தை ஒலிக்கவிட்டு முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றும் வேளையில் அதற்குள்ளாகவே விடுதியிலிருந்து எழுந்து ஆய்வகத்தை நோக்கி உதவியாளர்களும் ஓடிவந்திருந்தனர். முக்கியமான எதையோ மறந்துவிட்டோம் என்கிற யோசனைதான் இருவருக்கும் இருந்தது. ஆய்வகத்தின் உள்ளறை உட்பட அனைத்தையும் மறந்து வெளியேற முனைந்த கேமசரிக்கு மனம் வரவில்லை. இரவுபகல் பார்க்காமல் அவனுள்ளே கனன்றெரிந்தவொரு கனவு ஒரு சிறு பிழையினால் பயனின்றிப்போவதை அவனால் ஏற்கமுடியவில்லை. அக்கணம் அவன் தனக்குப் பின்னிருந்து ஒரு பெரும் பிரகாசத்தை உணர்ந்தான். இதுநாள்வரை கனவில் தான் கண்ட அதே ஒளிவீச்சு ஒரு பிரம்மாண்ட வெளியாகப் பரவி அவனைப் பின்தொடர்ந்து வந்தது. பின்தொடரும் நிழலென அந்த ஒளி அவன் நிஜத்தைப் பின்பற்றி அவனாக மாற விழைவதுபோலிருந்தது. கேமசரி பின்னால் திரும்பி அந்த ஒளி-நிழலை நோக்கினான். எல்லா நிறங்களையும் உட்கொண்ட பிரகாசம் இவனையும் உள்ளடக்கியதுபோல் அவன்முன்னே காட்சியளித்தது. பின்னிருந்து அழைக்கும் வருணின் கூக்குரலும் இவன் செவிகளுக்கு எட்டவில்லை. மெல்ல அந்தப் பிரகாச வெளியை நோக்கித் தன்னையறியாமல் அடிவைத்தான். ஆனால் அதற்குள் ஆண்டெனாக்கள் கருகி அறையின் முகப்புக் கண்ணாடிகள் சுக்குநூறாய்ச் சிதறின. கணினியின் நிரல் தொடர்பினை அறுத்துக்கொண்டது. மின்கலன் வைப்பறை புகையத் துவங்க, உட்புற அறையில் அலமாரியின்மீது வைக்கப்பட்டிருந்த கோப்புகள் கலைந்து காற்றில் பறக்கத் துவங்கின. எதிர்பாராத விதமாய்ப் பெரும் விசையோடு கேமசரி ஆய்வகத்தின் வெளிப்புறமாகத் தூக்கி வீசப்பட்டான்.

***

கேமசரியால் தன்னை எந்தவொரு ஒளி உருவாகவும் நினைத்துக்கொள்ள முடியவில்லை. பெரிதாக எதுவும் சேதமில்லையென்றாலும் கேமசரி பூரணமாகக் குணமடையப் பல நாட்கள் எடுத்தன. எப்போதும் இல்லாதளவுக்கு அவன் கனவுகள் தன்னை மொத்தமாகத் தீர்த்துக்கொள்ளுமளவு அவன் உறக்கத்தைப் பயன்படுத்திக்கொண்டன. மெய்மறந்து கிடந்த நித்திரை முடிந்து, சரியாக அவன் இரண்டு வாரங்களுக்குப் பின்பு ஓய்விலிருந்து எழும்போது வீட்டில் தனது அறையிலிருந்ததை உணர்ந்தான். நடந்தவை அனைத்தும் அப்படியே இன்னும் அவன் நினைவிலிருந்தன. கலக்கத்துடன் தன்னுடலைத் தொட்டுப் பார்த்து அசம்பாவிதமாக எதுவும் நடக்கவில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டாலும் மருந்துகளின் தீவிரம் இன்னமும் அவனை மயக்கநிலையிலேயே வைத்திருந்தது. அவனையும் மீறி ஏதோவொன்று அவனைப் பின்னால்நோக்கி இழுத்தது. போதாத குறைக்கு அருகிலிருந்த அறையில் தொலைக்காட்சியின் சத்தம் வேறு எரிச்சலைத் தர, கட்டிலைவிட்டு எழுந்து அறைக்கு வெளியே வந்தான். அங்கே முகப்பு அறையில் சுவரின் ஓரத்தில் போடப்பட்டிருந்த மெத்தையில் கேமசரியின் அம்மா சாய்ந்து அமர்ந்தபடி தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்தார். மேலும் அவளின் இரு கைகளையும் அவளால் நன்கு அசைக்க முடிந்ததையும் கவனித்தான். இவனுக்கு நடப்பதை ஒருநொடி நம்பமுடியாமலிருந்தது. அந்தச் சமயத்தில் வெளியே சென்றிருந்த வருணும் அங்கு வந்துசேர்ந்தான். கேமசரி கண்விழித்ததைக் கண்டு வருணும், ஓரளவு குணமடைந்து எழுந்து அமர்ந்துவிட்ட தனது அம்மாவைக் கண்டு கேமசரியும், தன் மகனை மீண்டும் பார்த்த பூரிப்பில் கேமசரியின் அம்மாவும் ஒருவரையொருவர் நோக்கிக்கொண்டு பெருமகிழ்வுக்கும், இயல்புநிலைக்கும் இடையே தத்தம் பார்வையினால் அலைபாய்ந்தனர்.

நடந்தவற்றைக் கூறுவதற்கு அவ்வளவு இருந்தன வருணிடம். ஆனால் கேமசரியிடம் வெறுமனே கேள்விகள் மட்டுமே எஞ்சியிருந்தன. அம்மாவுக்குத் திடீரென்று வேலைசெய்த மருந்துகளின் பெயரென்ன..? ஆய்வகத்தின் நிலை என்ன…? பேராசிரியரின் அறையும் அதிலிருந்த ஆய்வேடுகள் மொத்தமும் எரிந்துவிட்டனவா..? அன்று நடந்த விபத்திற்கிடையிலும் ஏதேனும் தரவுகளைச் சேமிக்க முடிந்ததா..?

வருண் அமைதியாகக் கையிலிருந்த நாளிதழை அவனிடம் நீட்டினான். அதில் பன்னாட்டு வானியல் ஒன்றியத்தின் கூட்டம் நடைபெற்ற செய்தியைத் தலைப்புச் செய்தியாக முகப்பில் வந்திருந்தது. மேலும் அக்கூட்டத்தில் எடுத்த முக்கிய முடிவாக, “புளூட்டோ இனி ஒரு கிரகமாக ஏற்றுக்கொள்ள மாட்டாது. புளூட்டோவுடன் சேர்ந்து ஏரிஸ் உட்பட இன்னும் சில கிரகங்கள் ‘கோள்’ என்பதற்கான அந்தஸ்தை இழக்கிறது,” என்ற அறிவிப்புகள் செய்திகளாக அச்சிடப்பட்டிருந்தன. கேமசரிக்கு ஒன்றும் புரியவில்லை. என்ன இது..? எப்படி இது சாத்தியம்…? இதுவரைக்கும் நம்பப்பட்டு வந்த கிரகங்களின் கட்டமைப்பையே எவ்வாறு மாற்றியமைக்க முடியும்..? மேலும் நாளிதழில் அதே பக்கத்தில் இப்படியொரு முடிவுக்கான காரணமாக, புளூட்டோ என்ற கிரகம் அடிக்கடி தனது சுற்று வட்டப் பாதையிலிருந்தே விலகிச் சென்றுவிடுவதாகவும், சூரியனின் மையநோக்கு விசையிலிருந்து அதனை வெளியேற்றும் அளவுக்கு அது தனக்கென வேறொரு புறவிசையை எதிர்கொள்வதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. சூரியனின் ஈர்ப்பு வளையத்திலிருந்தே அடிக்கடி வெளியே சென்றுவிடும் புளூட்டோ மீண்டும் அதே பாதையில் வந்துசேரும் குணத்தினையும் விவரித்திருந்தனர். அவனைப் போலவே பலவிதமான சலசலப்புகள் சமூகத்தில் உண்டாகியிருப்பதை அந்த நாளிதழ் முழுக்கக் காண முடிந்தது. மேலும் இதுகுறித்து விஞ்ஞானிகளுக்கிடையே கேட்கப்பட்ட கருத்துகளில், ஒருவர் இந்தப் பண்பானது முன்பிருந்தே இருந்த ஒன்றாகத்தான் இருந்திருக்கும் என்றும், மற்றொருவரோ இது சமீபத்திய ஏதோவொரு புறத் தூண்டுதலினால் நிகழ்ந்திருக்கலாம் என்றும் பதில் கூறியிருந்தனர். நாளிதழை வாசித்துமுடித்த கேமசரியின் கண்கள் குழப்பத்தில் மேலதிகமாய் அலைபாய்ந்தன. நடக்கக்கூடாத ஏதோவொன்று பிழையாக நடந்துவிட்டதுபோல் எண்ணங்கள் அவனை மேலும் மூர்ச்சையாக்கின. இதை ஏன் வருண் தன்னிடம் கொடுக்கவேண்டுமென யோசித்தவன் பிறகு உடனே நினைவுக்கு வந்தவனாய் இந்த அறிவிப்புகள் குறித்து மேத்யூ எதேனும் தெரிவித்திருக்கிறாரா என்று கேட்ட கேமசரியை, வருண் தன் பார்வையில் எந்தவிதப் பதிலேதுமின்றி நோக்கினான்.

அந்நேரத்தில் அவனுக்குள் மற்றொரு சந்தேகம் விபரீதமாக உதித்தது. அப்படி நினைப்பது அபத்தமாகத் தோன்றினாலும் தயக்கத்துடன் வருணை நோக்கி அக்கேள்வியை வினவினான் கேமசரி, “ஒருவேளை நாம்தான் காரணமோ..?”


ஓவியம்: Created with AI Bing Image Creator
நன்றி: சுரேஷ் செல்லப்பன்

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி 4இல் தேர்வான பிற கதைகள்

1 thought on “தப்பிச்செல்லும் கிரகங்கள்”

  1. அருமை. White Hole வழியே ஒரு கிரகத்தையே நெம்பி தள்ளி விட்டது நல்ல கற்பனை. அதிகப் படி tech ஜார்கன் இல்லமால் சரளமாக போகிறது . அது சரி. அந்த ஒளிப்பந்தும் இவர்களை கவனித்து வேண்டியதை செய்து தருகிறதா?

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்