தேவதேவன் கவிதை: ஓவியம் பானு

தேவதேவன் கவிதைகள்

< 1 நிமிட வாசிப்பு

இழப்பு

நான் உன்னைக் கண்டுகொண்ட நாள்தான்
இப்படி விரிந்து கிடக்கிறதோ?
இந்த அமைதியை
யார் விரும்புகிறார்கள்?

குழந்தைகள் மட்டும்தான்
விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்!

பார்த்துக் களித்துக் கொண்டிருக்கும்
பெற்றோர்களும் கண்டுகொள்ளவில்லை.

இசை முதலாம் எல்லாக் கலைகளுமே
தோற்றுவிட்டன.

பெரும் புதையலைத் தனக்குள் கொண்டிருக்கும்
இந்த அமைதியை
அகழ்ந்து பார்க்கத் தெரியாத
அச்சமும் ஆர்வமின்மையாலும்தானே
அகலாது நிகழ்ந்துகொண்டேயிருக்கின்றன
நம் துயர்களும் போர்களும்?


உயர் அடுக்கக இல்லக் கட்டடங்கள்

மலைகளாய் உயர்ந்துவிட்ட
தேன்கூடுகள்!
இனி தேனீக்கள் சிறகடித்தலையும்
மலர்வெளியாகத்தானே
இருக்க முடியும் இந்த பூமி?


புகைப்படம்: பானு

இதழ் 14 பிற படைப்புகள்

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்