கே.பாலமுருகன் சிறுகதை

மாலை 7.03

13 நிமிட வாசிப்பு

மார்ச் 2 
எட்டாவதுமுறையான மாலை 5.55 

“காலம் தொடர்ந்து உன்ன வாந்தியெடுத்துக்கிட்டே இருக்கு…அவ்ளதான்…” 

இதுதான் எனக்கு ஓரளவில் புரிந்து நான் எளிமைப்படுத்திக்கொண்ட ஒரு வாக்கியம். மனம் ரொம்பவே அலுத்துப்போயிருந்தது. புகைநெடியும் நேற்று மழை பெய்து விட்டிருந்ததற்குச் சாட்சியாகக் காயாமல் கொடிகளில் தொங்கிக் கொண்டிருந்த வங்காளதேசிகளின் உடைகளின் வாசனையும் தன்னுள் கலந்துகொண்டு வீசும் காற்று அத்துணை உவப்பானதாக இல்லை. எதிரே இருக்கும் பெரும்பாலான வீடுகள் அவர்களாலே நிரம்பியிருந்தன. ஒரு வீட்டில் எப்படியும் ஐந்தாறு பேர் ஒன்றாகத் தங்கிக் கொண்டிருந்தனர். மூச்சை இழுத்து அதனைத் தம்கட்டி பின்னர் விட்டுக்கொண்டேன். 

“ஓகே, இப்ப நான் என்ன செய்யணும்? அவனத் தடுக்கணும்…” 

நிகழ்ச்சிகள் தம்மைத் தாமே அடுக்கிக்கொள்கின்றன. அதில் சற்றும் பிசிறில்லாமல் உபநிகழ்வுகள் தம்மை இறுக்கிக்கொள்கின்றன. அதன் கூட்டுத் தொகைதான் நாம். முதல்முறை இப்படியான சிந்தனைகள் ஏதும் தோன்றவில்லை. குழப்பம் ஞானத்துக்கு இட்டுச் செல்லும். அதற்கு முதலில் குழப்பம் அவசியமாகிறது. சற்றும் ஓரவஞ்சனை காட்டாமல் குழப்பம் என்னைத் தூர்வாறி வீசியபடியே இருந்தது. 

எனக்கு முன்னே ஒரேயொரு கதவு. இலேசான இடைவெளியில் திறந்திருந்தது. அதை மேலும் திறந்தால் அந்தப் பக்கம் அவன் சாப்பிட்டுக் கொண்டிருப்பான். கையில் வைத்திருக்கும் கட்டையால் அவனைத் தாக்க வேண்டும். இன்னும் ஒரு 10 மீட்டர் இடைவெளியில்தான் நாங்கள் இருக்கின்றோம். குறைந்தபட்சம் அவன் இங்கே மயக்கமடைந்துவிட வேண்டும். இல்லையெனில் அவன் அடுத்த ஒரு மணி நேரத்தில் மீண்டும் பயணத்தைத் துவங்கிவிடுவான். அது நடந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாய் நிற்கின்றேன். 

இதைப் புரிந்து திட்டமிட்டு முடிவெடுப்பதற்குள் எத்தனை ‘தேஜாவுகளைக்’ கடந்து வரவேண்டியுள்ளது. சுவரின் வெறுமையும் அடியில் அடர்ந்து பூத்திருந்த கருமையும் அப்பொழுதுதான் விநோதமாகக் காட்சியளித்தன. வீட்டின் சுவரை நான் அலங்கரித்ததே இல்லை. அப்படியே இருக்கட்டும் என விட்டுவிட்டேன். ஆனால், இப்பொழுது அவை வெறுமையின் முடிவிலியாக விரிந்து சென்று கொண்டிருந்தன. 

கைகள் உதறின. இதுவரை பிறரைத் தாக்கவோ அல்லது தாக்குதல் செய்ய வேண்டும் என்ற எண்ணத்திற்கு முன்போ இத்தகைய நிலையில் நின்றதில்லை. வலது கை கதவின் திருகிக்கு அருகே சென்றது. அதனைக் கெட்டியாகப் பிடித்துக் கதவை உள்பக்கமாக இழுத்தால் அவன் என்னைப் பார்ப்பான். நிச்சயமாக அதிர்ச்சியடைவான். அதிலிருந்து அவன் மீள்வதற்குள் நான் அவனைத் தாக்க வேண்டும். அவனது மயக்கநிலை மாலை 7.03 வரை நீடித்துவிட்டால் போதும். 

எல்லாம் எங்கிருந்து துவங்கின என்கிற குழப்பத்திலிருந்துதான் முழுத் தெளிவையும் பெற முடியும். நான் இன்னும் முழுமையாக அதன் சுழல்வெளியிலிருந்து அகலவில்லை. மனத்தினுள் அத்துணைப் பதற்றம். ஒரு முழு நூற்றாண்டை வாழ்ந்து கழித்த சலிப்பும் வெறுப்பும் ஒருசேர அழுத்தின. ஒரு பத்து மீட்டர் தூரத்தில் இதற்கான விடை இருக்கின்றது. மனத்தின் எதிரொலி கைகளில் நெளிந்து கொண்டிருந்தது. அடுத்து நடக்கவிருப்பதைச் சட்டென்று மூளை உணர்கிறது. அடுத்த கணமே அவசரத்தில் சன்னல் பக்கத்தில் இருந்த குவளையை மீண்டும் தட்டிவிட்டேன். அது தரையில் உருண்டு பேரொலியுடன் நான் திறக்கக் காத்திருந்த கதவில் மோதி அசைவுகளை நிறுத்தியது. 

மார்ச் 2 
முதல்முறையான மாலை 6.55 

நானிருந்த அடுக்குமாடியிலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் பழைய பேருந்து நிறுத்தம் அது. புடுராயா என்றால் எல்லோருக்கும் பழகிப்போன இடமாகும். வெளிமாநிலங்களுக்குச் செல்லும் பேருந்துகள் வந்து குவியும். இப்பொழுது செயல்பாட்டில் இல்லையென்றாலும் அங்கு முன்பு சதா கேட்ட பேருந்து ஒலிகள் இப்பொழுதும் உள்ளுக்குள் கேட்டுக்கொண்டே இருக்கும். அதன் மேல்தளத்தையொட்டி விரைவு இரயிலுக்காக அமைக்கப்பட்ட மின்தண்டவாளப்பாதை போய்க் கொண்டிருந்தது. தூக்கி உயரத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட இராட்சதக் கால்கள் அவை. சட்டென நகரத்தின் எல்லா வாயில்களிலும் நிரந்தமாகிவிட்ட வழித்தடம். 

“அவசரத்துக்குப் பொறந்த ஒவ்வொருத்தனும் கட்டாயம் பயணம் செஞ்சாக வேண்டிய பாதை… சொய்ங்ங்ங்னு போய்ச் சேரவேண்டிய இடத்துல நம்மள கக்கிட்டுப் போய்ட்டே இருக்கும்… போறதும் வர்றதும் தெரியாது… தெரியக்கூடாது… அதுக்குத்தான்…” என யாராவது கேட்டால் இப்படித்தான் அறிமுகப்படுத்தக்கூடிய அளவிற்கு அவதானிப்பு இருந்தது. 

இன்றிரவு வயிற்றுப் பிரச்சனைக்கான புதிய மருந்து தொடர்பான கூட்டம். கட்டாயம் ஏஜெண்டுகள் வர வேண்டும் என சீன மேலாளர் சொல்லிவிட்டார். கடந்த மாதம் காப்புறுதி நிறுவனத்தில் அவ்வளவாக முன்னேற்றம் இல்லை. வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் ஒரேயொரு மலாய்க்காரர் நண்பர் குடும்பத்துடன் மாதக் கட்டணம் 250 வெள்ளி என ஒரு மில்லியன் காப்புறுதித் திட்டம் வாங்கியதோடு வேறு எந்த வரவும் இல்லை. அலுப்புடன் விரைவு இரயில் நிலையத்தை நோக்கி நடக்கத் துவங்கினேன். 

வீட்டிலிருந்து பார்த்தாலே இந்த விரைவு இரயில் புடுராயா கட்டிடத்தை உரசியவாறே செல்வது தெரியும். ஒரே மாதிரி, ஒரே அளவில் அது நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. சன்னல் வழியாக இந்தப் பரபரப்பை நாள்தோறும் கவனித்துக் கொண்டிருக்கிறேன். அலுப்பில்லாமல் சதா ஒரே மாதிரி அசைந்து கொண்டிருக்கும் நகரம். இரவில்கூட ஓயாமல் சப்தமெழுப்பிக் கொண்டிருக்கும். பளபளக்கும் சிவப்பும் மஞ்சளும் கலந்த பழைய நகர். இங்குக் குடிவந்து கடந்த பதினைந்து ஆண்டுகள் அதன் அத்துணை வளர்ச்சியிலும் என் நினைவுகள் ஒட்டிக் கொண்டிருக்கின்றன. அதுவும் இந்த விரைவு இரயில் வந்து தொலைந்த காலத்தில்தான் இத்தனை ஆர்பாட்டம். 

“உன் வீட்டாண்ட கால்ல சலங்க கட்டிக்கிட்டு ஆடுது டவுன்னு… சாவறதுக்கு வேணும்னா வரலாம்…” இதுதான் அப்பா சொன்னது. எத்தனைமுறை அழைத்தும் கெடாவிலிருந்து அவர் இங்கு வந்து தங்குவதாக இல்லை. கடந்தமுறை ஒரு வாரம் தங்கிவிட்டு ஓடிப்போனவர்தான். இதே புடுராயா நிறுத்தத்தில்தான் பேருந்து ஏற்றிவிட்டேன். தம்பி வீடே சொர்க்கம் என உணர்ந்தவர் எனக்குக் கைகூட அசைக்கவில்லை. 

“ஒன்னு கல்யாணம் பண்ணிக்கிட்டு கெடா பக்கம் வந்துரு… இங்க வெறும்பையன் மாதிரி வாழ்ந்துகிட்டு இருக்கறதுக்கு அங்க ஏதாச்சம் கேளாங்ல வேலை செஞ்சிருந்தாலும் ஒரு சுப்பர்வைசராவது ஆகியிருக்கலாம்…” 

அப்பாவிற்குத் தெரிந்தது காலை 8.00 மணிக்கு உள்ளே நுழைந்து மாலை 5.00 மணிக்கு வெளியேறும் தொழிற்சாலை வேலைதான். தம்பியை ‘ஷார்ப்’ தொழிற்சாலையில் ஒப்பந்தத்துக்குச் சேர்த்துவிட்டு “இப்ப அவன் லைன் டெக்னிஷன் ஆயிட்டான் தெரியுமா?” என வியந்து புகழ்வார். அவர் புருவத்தின் வளைவில் அத்தனை பெருமிதம். சப்தங்களையும் பரபரப்பையும் பரந்தவெளியையும் தேடி கோலாலம்பூர் வந்தது அவருக்குச் சற்றும் பிடிக்கவில்லை. அதுவும் பரந்தவெளி எனச் சொல்லிவிட்டு இங்குள்ள சிறிய அடுக்குமாடியொன்றில் அறை அளவிலேயே இருந்த ஒரு சிறிய வீட்டில் வெறும் மெத்தையைத் தரையில் விரித்துவிட்டுச் சன்னலைத் திறந்தால் காற்று வரும் என நான் வாழும் வாழ்க்கை அவருக்குக் கிஞ்சுற்றும் பிடிக்கவில்லை. 

“என்னடா இது? பரதேசி மாதிரி… அதென்னடா இவ்ள உயரத்துல தூங்கிட்டு இருக்க பெரிய இவனாட்டம்…” அப்பாவிற்கு அடுக்குமாடி வீடுகளில் இருக்கப் பிடிக்காது. புலம்பித் தள்ளிவிட்டு அவர் ஓடிப்போன அன்றைய நாளில்தான் நான் என்ன மாதிரி வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்ற வியப்பும் வெறுப்பும் பேதியைப் போல் கலந்தடித்தன. 

ஓடும் மனிதர்கள் மத்தியில் நடப்பதென்பது அசூசையாகத் தோன்றும். பிறகொரு நாளில் விரைவு இரயிலைப் பிடிக்க நானும் ஓடப் பழகிக்கொண்டேன். ராஜா லவுட் சாலையைக் கடந்து பரபரப்பின் வாய்க்குள் ஓடிக் குதித்தால் புடு சாலை. எல்லோரும் சேர்ந்து படிகளில் ஏறி ஓடுவோம். அதுவோர் ஓட்டப்பந்தயம் போல அமைந்திருக்கும். நமக்கே நமக்கான பந்தயம். காலத்துடன் போடும் சண்டை. ஒரு இரயிலை விட்டால் அடுத்த இரயில் பத்து நிமிடங்களுக்குள்ளே வந்தபடியேதான் இருக்கும் எனத் தெரிந்தும் பதற்றத்துடன் ஓடுவது பிடித்திருந்தது. காலத்தோடு கரைவது அத்தனை இன்பம். 

புடு இரயில் நிலையம் வரை படிக்கட்டுகளில் அமர்ந்துகொண்டு எந்நேரமும் தனது கித்தாரை இசைத்துக் கொண்டிருப்பவரையும் திசு பேப்பர் விற்பவரையும் தெரியாதது போல் கடப்பதுதான் சவால். அதற்கொரு கல் மனம் வேண்டும். மற்றவர்கள் சில்லரை காசுகளைத் தூக்கி வீசிவிட்டுப் போகும் இடைவெளியில் அதன் சத்தம் கித்தாரின் ஒழுங்கற்ற இசையில் கலந்து மனத்திற்குள் குற்ற ஓசையாக அதிர்ந்து ஓயும்வரை ஏதும் நடவாதது போல் நடந்து தொலைய வேண்டும். 

“இவனுங்களுக்கு வேற வேலையே இல்ல… காலைல புடு ராயா… சாய்ங்காலம் மஸ்ஜிட் ஜாமேக்… அப்புறம் ராத்திரில கெலானா ஜெயா… எல்.ஆர்.தி என்னா பிச்ச எடுக்கற வசதியயும் சேர்ந்து செஞ்சி கொடுத்துருக்கா?” 

அவர்களின் மீதிருக்கும் கருணையைவிட அவர்களுக்கு உதவ முடியாமல் போகும் குற்றவுணர்வைச் சமாதானம் செய்துகொள்ள யாரிடமாவது இப்படிக் கத்தி வியாக்கியானம் செய்வதுண்டு. அதன் மூலம் கனமான பொழுதுகளைக் கடந்துவிடலாம் எனத் தோன்றும். 

ஏதேதோ நினைப்புகள் உள்ளே மோதிக் கொண்டிருந்தன. தினமும் பார்த்துக் கடந்து சலித்துப்போன நினைவில் பிசிறில்லாமல் சம்மணமிட்டு அமர்ந்திருக்கும் அத்தனை வலுவான குறிப்புகளுடன் நகரம் தெரிந்தது. வாகனப் புகை நெடி சூழ்ந்து அசௌகரியம் தலைக்கேறச் சாலையைக் கடந்தேன். விரைவு இரயில் படிக்கட்டிற்கு ஏறும் இடைவெளி ஆளரவமில்லாமல் காணப்பட்டது. சிலர் கூர்ந்து மேலேறும் படிக்கட்டின் உச்சத்தில் இருந்தனர். இது கொஞ்சம் நீளமான படிக்கட்டு. படபடவென ஓடினால் தூரம் தெரியாது. ஓடுவதற்குத் தயார்ப்படுத்திக்கொண்டு படிக்கட்டைச் சேரும் முன், நேற்று பெய்த மழையில் தேங்கியிருந்த தண்ணீர் மேட்டைக் கவனிக்காமல் விட்டுவிட்டேன். 

புடு ராயா பேருந்துகள் நிற்கும் பழைய கீழ்த்தளத்திற்குச் சென்றிறங்கும் படிக்கட்டில் சரிந்து விழும்போது காற்றில் மிதப்பது போலவே இருந்தது. நினைவுகள் அறுந்து சிதறல்களாக வட்டமிட்டன. பட்டணத்தின் பெரும் இருளை நோக்கி வீழ்ந்து கொண்டிருந்தேன். மூத்திர வாடையும் புகைத்துப் போட்டு நஞ்சிப்போன சிகரெட்டுகளின் நெடியுமென மண்டைக்குள் மரணம் சூழ்ந்து அமிழ்த்தின. உடல் சுழன்று பள்ளத்தாக்கில் சரிவதாக ஒரு நினைப்பு. 

மார்ச் 2 
முதல்முறையான மாலை 3.00 

அவசரமாக வீட்டை நோக்கி விரைந்தேன். சீன மார்க்கெட் சாலையின் பரபரப்பில் இருந்தேன். சட்டையெல்லாம் கால்வாய் நெடி. எங்கோ சாலையோரம் படுத்தெழுந்து மீண்டும் நடந்து கொண்டிருந்தேன். இன்று மாலை கூட்டத்திற்குப் போக வேண்டும். அதற்குள் எப்படி இத்தனை அலட்சியமாக இருந்திருக்கிறேன் என என்னை நானே கேட்டுக்கொண்டேன். கூட்டத்தில் எல்லா மொழிகளும் கலந்து ஓர் இரைச்சலாகக் கேட்டது. புரியாத ஊரில் மொழி தெரியாது ஓர் அந்நியன் போலக் குழம்பிப் போயிருந்தேன். 

“நேத்து குமாரு பொறந்தநாளுக்குப் போனன்… நைட்ல கொஞ்சம் பீர்… ஆனா… போதை இல்ல… சசிதான் வந்து புடுராயாகிட்ட இறக்கிவிட்டான்… நடந்துதான வீட்டுக்குப் போய்ப் படுத்தோம்…? அப்புறம் எப்படி இங்க…?” 

மனத்தில் ஆயிரம் கேள்விகள் சூழ்ந்து நின்றன. விரைந்து நடந்தபோது மதிய வெயிலின் மிச்சமான காட்டம் இன்னுமும் முழுமையாகக் குறையாமல் எங்கும் அலைந்து கொண்டிருந்தது. புறமுதுகில் சூடு பளீரென்று அறைந்து கொண்டிருந்தது. காப்புறுதி நிறுவனத்தின் சட்டையை அணிந்திருப்பதை அப்பொழுதுதான் கவனித்தேன். இன்று மாலைதான் இதை அணியலாம் என்று நினைத்திருந்தேன். நேற்றிரவு வீட்டில் தூங்கும் முன் இந்தச் சட்டையை அணிந்திருக்கலாமோ என்கிற சந்தேகமும் புகுந்துகொண்டது. 

“ரூம்பு வேணுமா? எழுபது வெள்ளித்தான்… ஹவுர்ஸ் கணக்கும் இருக்கு…” 

சாலையோரங்களை அவர்கள்தான் நிறைத்துக்கொண்டு நின்று கொண்டிருக்கிறார்கள். போவோர் வருவோரிடம் இந்தக் கேள்விகளைக் கேட்டுவிட வேண்டும் என்கிற பதற்றமிகு ஒழுங்கு. அவனை நானே பலமுறை இந்தச் சாலையில் பார்த்திருக்கிறேன். இதுபோல அவனே என்னிடம் பலமுறை கேட்டு நான் வேண்டாம் என நகர்ந்துள்ளேன். இத்தனையையும் என்னைப் போல அவனால் நினைவுபடுத்த இயலவில்லை என அவன் மீது கோபமாக வந்தது. இருக்கின்ற குழப்பத்தில் அவனைப் பொருட்படுத்தத் தோன்றவில்லை. குழப்பம் ஒரு குமிழ் போல. தமது வட்டங்களைப் பெரிதாக்கிக் கொண்டே செல்லும். 

அவசரமாக அடுக்குமாடியின் முன்னே வந்து நின்று நான்காவது மாடியில் இருக்கும் என் வீட்டைக் கவனித்தேன். சாலையைப் பார்த்தபடியே அமைந்திருக்கும் சன்னல். காற்றாடி ஓடிக் கொண்டிருந்ததன் அடையாளமாய்ச் சன்னல் துணி படப்படத்துக் கொண்டிருப்பது ஓரளவில் தெரிந்தது. அல்லது அது என் கற்பனையாகக்கூட இருக்கலாம். வழக்கமாக நான் தேநீர் குடிக்கும் குவளையைக் கொண்டு வந்து சன்னல் ஓரத்தில் வைத்துவிட்டு ஓர் உருவம் நகரை வேடிக்கை பார்க்கத் துவங்கியது. தூரத்திலிருந்து பார்ப்பதற்கு என்னைப் போலவே இருந்தது. 

மார்ச் 2 
மூன்றாவது முறையான மாலை 5.55 

கீழே மாமாக் கடையில் வாங்கி வைத்திருந்த மீ கோரேங் ஒரு மாதிரி வீச்சம் அடிக்கத் துவங்கிவிட்டது. நேற்று உறங்க நேரமானதால் மதியம் சிரமப்பட்டு எழுந்து சென்று அவசரமாக வாங்கி வைத்துச் சில மணி நேரங்கள் ஆகிவிட்டன. போதையின் அழுத்தம் வேறு. இப்படி எப்பொழுதாவதுதான் குடிப்பதுண்டு. இன்று நடக்கவிருக்கும் ஏஜெண்ட் சந்திப்புக்குச் சரியான நேரத்தில் போய்விட வேண்டும். மாத இறுதிக்குள் புதிதாக அறிமுகம் காணவிருக்கும் மருந்தைக் குறைந்தது இருபது பேரிடமாவது விற்று அவர்களுள் ஒரு பத்துப் பேரையாவது ஏஜெண்டாக்கிவிட்டால் ஒரு முன்னேற்றம் இருக்கும். 

“சொந்தமா ஒரு அம்பது பேருக்கு மேனஜரா ஆயிரணும்… இன்னும் என்னனென்ன பொருள் மார்க்கேட்டுக்கு வருதோ எல்லாத்தலயும் ஏஜெண்டாயிருணும்… இவ்ள மக்கள் கூட்டம் இருக்கற டவுன்னுல வேற எதுக்கு வாழணும்…?” 

எனக்கு நானே சொல்லிக் கொள்ளும்போது வரும் உற்சாகத்தில்தான் அப்பா என் மீது திணித்துவிட்டிருந்த அத்துணை வெறுப்புகளையும் தாண்டி இங்கே வாழ முடிந்த ஒரு தெம்பு கிடைக்கும். பெருநகர் சலனம் காதுகளில் ஓயாமல் இரைப்பது சுகமாக இருக்கிறது என நினைத்துக்கொள்வேன். 

“என்னிக்காவது நேரத்த ஒழுங்கா கடைபிடிச்சிருக்கியா? நீயெல்லாம் எப்படி மார்க்கெட்டிங்ல பேரு போட முடியும்?” 

சீன முதலாளி மலாய்மொழியைச் சிரமப்பட்டு அடுக்க, அது சரியான முறையில் நிரல்படுத்திக்கொள்ள முடியாமல் சிதறும். ஆனால், திட்டுகிறான் என்பது மட்டும் உறுதியாகும். கன்னம் விரைந்து சிவப்பாகியதும் முகம் உப்பிக்கொள்ளும். அவனது கோபத்தைவிட அவனுடைய மலாய்மொழியைப் புரிந்துகொள்வதுதான் சிரமாக இருக்கும். அதனால் பெரும்பாலும் எதிர்த்துப் பேசாமல் “சாரி போஸ்… சாரிலா…” என மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே இருப்பேன். இங்கு நாம் சிறுமுதலாளியாக வேண்டுமென்றால் முதலில் சுரணையில்லாமல் உடனே மன்னிப்புக் கேட்டுக்கொள்ளும் உத்தி தெரிந்திருக்க வேண்டும். அதுதான் என்னைக் காப்பாற்றியும் வந்தது. 

“ஐயோ… இனி மச்சாம் சூசாலா…” என நொந்துகொண்டு உடனே மன்னித்துவிடுவான். 

இன்றும் எப்படியும் தாமதாகிவிடக் கூடாது. ஓட்டத்திற்குத் தயாராக வேண்டும். சாப்பிட்டுவிட்டு ஓடுவது கொஞ்சம் சிரமம் என்றாலும் எப்படியும் விரைவு இரயிலில் இடம் கிடைக்கப் போவதில்லை. நின்றுகொண்டே அரை மணி நேரம் பயணிக்க வேண்டும். அதில், உணவு செரிமானம் ஆக வாய்ப்புண்டு. 

சட்டென பக்கத்து அறையில் குவளை விழுந்து கதவில் மோதும் சத்தம் கேட்டது. மதியத்தில் குடித்து வைத்த தேநீர்க் குவளையைப் பூனை பதம் பார்த்துவிட்டிருக்கலாம். அந்தச் சத்தம் இப்பொழுது நான் நினைப்பது அனைத்தும் முன்பே பலமுறை நடந்துவிட்டதைப் போல உணர்ந்தேன். இதே சத்தம்; இதே பரபரப்பு. அதே போலக் கைப்பேசியும் அலறியது. மதியத்தில் வைத்த அலாரம். 

கைப்பேசியை எடுத்துக்கொண்டு ‘மீ கோரேங்கை’ அப்படியே வைத்துவிட்டு வீட்டைவிட்டு வெளியேறினேன். 

மார்ச் 2 
முதல் முறையான மாலை 3.45 

நான் எப்படி என்னையே பார்க்க முடிகிறது. குழப்பத்தின் பெரும் திரளுக்குள் மிகுந்த துடிப்புடன் மனம் இலயித்திருந்தது. மாடிக்குப் படியேறி என் வீடுவரை சென்றுவிட்டேன். யாராவது பார்த்தால் ஏதாவது சந்தேகம் வரலாம். வீட்டின் குளியலறை முன்கதவின் பக்கத்திலேயே இருந்ததால் வீட்டிலிருக்கும் நான் குளித்துக் கொண்டிருக்கிறேன் என என்னால் ஊகிக்க முடிந்தது. இது ஒருவகையான ஆச்சரியத்தையும் குதூகலத்தையும் உண்டாக்கியது. இப்படி ஏதும் அதிசயம் நடந்தால் அது கொடுக்கும் அளவில்லாத துடிப்பும் தவிப்பும் விநோதமானவையாக இருக்கும். 

‘காலைல எந்திருச்சி… எவன்கிட்ட என்னா பேசி அவன இன்சுரன்ஸ் எடுக்க வைக்கணும்… அவனோட மரணத்துக்கு ஒரு மில்லியனாவது அர்த்தம் இருக்கணும்னு ஆரம்பிச்சி… நீ செத்துட்டா உன் பெண்டாட்டி பிள்ளைங்க கடன்லாம் மாட்டிக்குணுமா வரைக்கும் பேசி, அதையே திரும்பத் திரும்பப் பேசி, அவன உணர வச்சு, சைன் பண்ற வரைக்கும் அவன்கிட்ட லோல் பட்டுக் குலைஞ்சி சிரிச்சி… ச்சே… இன்னிக்குத்தான் வாழ்க்கையில ஓர் அதிசயம் அதுவா நடந்துகிட்டு இருக்கு…’ 

எதுவாக வேண்டுமென்றாலும் இருக்கட்டும். என்னை நான் பார்த்துக்கொள்ளும் ஓர் அற்புதம் என் வாழ்வில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அதற்கு முன்பாக என் வீட்டில் என்னைப் போலக் குளித்துக் கொண்டிருக்கும் இவன் யார் என்பதே எனக்கான பதில். முன்கதவைத் திறக்க முனைந்தேன். நல்லவேளையாக முன்கதவை அடைக்கவில்லை. இது எனக்கிருக்கும் கெட்ட பழக்கம். எப்பொழுது வீட்டிற்கு வந்தாலும் முன்கதவைப் பூட்ட மறந்துவிடுவேன். அப்படிப் பூட்டாமல் பலநாள் இரவுகள் கழிந்ததுண்டு. திருடன் உள்ளே வந்தாலும் எடுத்துச் செல்ல நான் மட்டுமே வீட்டில் இருந்தேன். ஆகையால், திருட்டும்கூட இந்த வீட்டில் நடந்ததில்லை. எத்தனை அலுப்பான ஒரு காரியம்? ஒரு திருட்டுக்குக்கூட என் வீடும் நானும் வக்கில்லாமல் இருந்தோம். அந்தக் கெட்டப் பழக்கம்தான் இப்பொழுது வீட்டிற்குள் நுழைய பேருதவியாக இருந்தது. 

உள்ளே நுழைந்ததும் வீட்டின் மூலையிலிருக்கும் அறைக்குள் ஒளிந்துகொண்டேன். இப்பொழுது என்னையும் அவனையும் பிரித்துக் கொண்டிருப்பது ஒரு கதவு மட்டும்தான். அவன் தவறுதலாக இவ்வறைக்குள் வந்துவிட்டால் என்ன ஆகும் எனத் திகைப்பாக இருந்தாலும் அதையும் பார்த்துவிடலாம் என்றே தோன்றியது. அதிசயத்தின் முன்னே ஒரு குதூகலமான குழந்தையைப் போன்று எக்கித் தாவிப் பரவசப்பட்டுக் கொண்டிருந்தேன். 

“அய்யா ஜாலி…” என இந்தப் பெருநகர் சாலையின் நடுவே கத்திக்கொண்டு ஓட வேண்டும் என மனம் பரபரத்துக் கொண்டிருந்தது. 

நினைத்ததைப் போல அவன் உள்ளே வரவில்லை. ஏதோ வேலைகள் செய்துகொண்டும் கோப்புகளை உருட்டிக்கொண்டும் இருந்தான். பிறகு, நாற்காலியில் அமர்ந்தபடியே தூங்கிக் கொண்டிருந்தான். இன்று நடக்கும் மாலைக் கூட்டத்தைப் பற்றி நினைவு வந்துவிட்டது. இந்த அதிசயத்தை முழுமையாகத் தரிசிக்காமல் சந்திப்பாவது கூட்டமாவது என்கிற ஓர் ஏளன மிதப்பில் இருந்தேன். 

நேரம் துள்ளிக் குதித்துக் கடந்தோடிக் கொண்டிருந்தது. சடாரென 5.20க்கு அதிர்ச்சியுடன் எழுந்து எங்கோ கிளம்புவதற்குத் தயாராகிக் கொண்டிருந்தான். 

மார்ச் 2 
ஐந்தாவது முறையான மாலை 6.55 

புடுராயாவின் பழைய படிக்கட்டு அது. அதன் முடிவில் முளைக்கும் இன்னொரு பாதையில் வலதுபக்கமாக மேலேறி நடந்தால் புடு விரைவு இரயில் நிலையத்துக்குச் செல்ல முடியும். அவன் அதை நோக்கித்தான் நடந்து கொண்டிருக்கிறான். இன்னும் எட்டு நிமிடங்களில் அவனை நிறுத்த வேண்டும். இரண்டு முறை எனது முயற்சிகள் தோல்வியில்தான் முடிந்தன. இவையாவையும் எனக்கு மூன்றாவது சுழற்சியில்தான் ஓரளவிற்குப் புரிந்துகொள்ள முடிந்தது. மனம் இத்தனை துண்டுகளாகப் பிரிந்து சுழல்கிறது. ஒவ்வொருமுறையும் மயக்கமும் பதற்றமும் கூடி அழுத்துகின்றன. துவக்கத்தில் இருந்த பரவசம் மெல்லக் குறைந்து பயமும் நடுக்கமும் கூடியிருந்தன. 

இப்பொழுது எனக்கு முன்னே நடந்து கொண்டிருக்கும் என்னை நான் ஐந்தாவது முறையாகப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். என்னால் அவனை எப்படி அங்குச் செல்லாமல் நிறுத்த முடியும் என்கிற தயக்கம். அவனை நிறுத்தாவிட்டால் இது மீண்டும் நிகழத் துவங்கும். சுற்றியிருப்பவர்கள் எங்கள் இருவரையும் பார்த்துவிட்டால் என்ன ஆகும் அல்லது நானே என்னை நேரில் நின்று சந்தித்தால் என்ன ஆகும் என்பதெல்லாம் எனது ஊகமாகவே இருக்கின்றன. எதையும் செய்து பார்க்க மனம் தடுத்துக்கொண்டே இருந்தது. 

ஜாலான் லவுட் சாலையின் பக்கம் கவனமாக அவன் பின்னே நடந்து கொண்டிருந்தேன். அங்கிருந்த பேருந்து நிறுத்தத்தில் எந்தக் கவலையும் இல்லாமல் ஒரு கிழவன் மல்லாந்து படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தார். அவரது தூக்கத்தில் எந்தத் தடுமாற்றமும் இல்லை. இத்தனை சுகமாக ஒருவனால் இந்த நகரத்தின் நடுவே தூங்கிக் கொண்டிருக்க முடியுமா? அப்பேருந்து நிறுத்தத்தைக் கடந்து சென்றதும் கொஞ்சம் தன்னம்பிக்கை உண்டானது. 

“டேய்! மண்ட ஓடி!” எனச் சத்தமாகக் கத்திவிட்டுப் புடு சாலையையும் ராஜா லவுட் சாலையையும் பிரித்துக் கொண்டிருந்த அந்த வளைவுச் சுவரில் பதுங்கிக்கொண்டேன். அப்படி அழைத்தால் அவன் சத்தம் கேட்கும் திசையைத் திரும்பிப் பார்க்கக்கூடும். இதனால் அவன் அங்குச் செல்வது தாமதம் ஆகலாம். அப்படித் தாமதமானால் அவன் விழாமல் படிக்கட்டில் ஏறி மேலே சென்றுவிடக்கூடும். இதெல்லாம் இன்னுமும் என் ஊகம்தான். இந்த ஒன்றை மட்டும் நிகழ்த்திப் பார்த்துவிட்டால் அடுத்து என்ன நடக்கும் என்பதைத் தெரிந்துகொள்ளத் துடிப்புடன் காத்திருந்தேன். சுவரின் முனையிலிருந்து மறைந்துநின்று அவனைப் பார்த்தேன். என் அழைப்பை அவன் சட்டை செய்யாமல் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தான். 

மணி சரியாக மாலை 7.03. அவன் நீர்த் தேக்கத்தில் கால் வைத்து இடறுகிறான். கீழே செல்லும் படிக்கட்டில் விழுகிறான். சட்டென ஓர் ஒளிவீச்சு என்னைச் சுற்றிச் சூழ்ந்து என்னைக் கரைத்துக் கொண்டிருக்கிறது. அடுத்து நான் மாலை 3.00 மணிக்குச் சீன மார்க்கெட் சந்தில் விழித்துக்கொள்வேன். 

“ச்சீ! என்ன வாழ்க்க இது?” 

மார்ச் 2 
ஏழாவது முறையான மாலை 7.03 

சரிந்து விழுந்தால் படிக்கட்டு முனைகளில் முகம், தலை, கை, கால்கள் பட்டு உடைப்படும் அல்லது மண்டை உடையலாம். இதுதான் ஒரு தற்செயலான விபத்தில் நடக்கக்கூடிய சாத்தியம். சற்றுமுன்பு இத்துணை ஆண்டுகளில் கடந்து, ஓடி, தாவி, பாய்ந்து சென்ற இத்துணைப் பரிச்சயமான இடத்தின் ஒரு சிறு நீர்த்தேக்கம் எப்படி என்னை வீழ்த்த முடியும்? 

இதற்குமுன் பலமுறை இப்படி விழுந்திருப்பது போன்ற ‘தேஜாவுடன்’ கீழே சரிந்து கொண்டிருந்தேன். இனி விழிக்கும்போது மருத்துவமனையில் விழிப்பேன் அல்லது அதுவும் இல்லையென்றால் செத்தொழுந்திருப்பேன். நினைப்பது, திட்டமிடுவது எல்லாம் நடக்க அதுவும் ஓர் எறும்புக்கூட்டத்தின் இரைச்சலில் அதிலும் அடையாளம் தெரியாத ஒரு சிற்றெறும்பாக இருந்தால் நல்ல இராசிபலன்கள் அமைவதில்லை. சனி உக்கிரத்திலும் குரு பக்கத்து வீட்டிலும் ஓடியாடி விளையாடிக் கொண்டிருக்கும் எனக்கெல்லாம் நினைப்பே இருந்திருக்கக்கூடாது. அப்படித்தான் அங்கு நான் நினைப்பவைகள் ஏதும் நடக்கவில்லை. ஏதோ ஓர் அடர்ந்த இருளுக்குள் வீழ்ந்து கொண்டிருந்தேன். தரை என்ன இவ்வளவு கீழாகப் போய்க் கொண்டிருக்கிறது? படிக்கட்டுகள் தெரியவில்லை. ஓர் இருளுக்குள் சுழன்று கொண்டிருந்தேன். 

கெந்திங் மலை ரோலர் கோஸ்டரில் ஏறியது போல இருள் சுழட்டியடித்துக் கால்களைப் பலம் கொண்டு எங்கோ இழுத்துச் சென்று கொண்டிருந்தது. கண்கள் இருண்டன. இதயத் துடிப்பு அதிகமாகியது. காற்றழுத்தம் தாள முடியவில்லை. நான் கீழே பயணிக்கும் வேகம் அதிவேகத்துடன் உருமாறிக் கொண்டிருந்தது. அப்படியே ஒரு புள்ளியென இந்த இருளில் நான் மறைந்து கொண்டிருந்தேன். பெருநகர் தெரியவில்லை; சத்தங்கள் கேட்கவில்லை. புகைநெடி இல்லை. ஆழ்ந்த சூன்யத்திற்குள் அசூர வேகத்துடன் உள்ளிழுக்கப்பட்டுக் கொண்டிருந்தேன். 

மார்ச் 2 
ஒன்பதாவது முறையான மாலை 6.55 

கடுமையாக மூச்சிரைத்தது. நகரம் முழுவதும் பதற்றத்துடன் நகர்ந்து கொண்டிருப்பதாகத் தோன்றியது. காலச் சுழற்சி அச்சுறுத்தலாக விரிந்திருந்தது. கடந்தமுறையைக் காட்டிலும் மனமும் மூளையும் ஒழுங்கைவிட்டு நிதானத்தைவிட்டு நழுவிக் கொண்டிருந்தன. எட்டுமுறை இறந்து பிறந்திருப்பது போன்ற மாயை. ஓர் அசுரத்தனமான ஒளிவெட்டு தாக்குகிறது. உடல் வலுவிழந்து வெறும் சதையால் மூடிக் கிடந்தது. 

‘முன்னுக்குப் போறவன விழாம தடுத்துட்டா மட்டும்தான் இந்த அத்தன போராட்டத்தயும் நிப்பாட்ட முடியும்… நான் வேகமா நடக்கறன்… அவன் விழும் அந்த இடத்துலத்தான் ஏதோ நடக்குது… இது யேன் எனக்கு மட்டும் நடக்கது? என் பக்கத்துல இருக்கறாங்கள இவுங்க எல்லாம்… எப்படித் திரும்ப திரும்ப வராங்க? அப்படின்னா இது அவுங்களுக்குத் தெரியாம நடந்துகிட்டு இருக்கா?’ 

சுற்றிலும் பெரும் பரபரப்பில் அசைந்து கொண்டிருந்த நகரத்தைப் பார்த்தேன். நகரப் பேருந்துகள் வெளியேறுவதும் கட்டிடங்களின் இடையே செல்லும் சாலைகளுக்குள் நுழைவதுமாக புகையைக் கக்கிக் கொண்டிருந்தன. அப்பொழுதுதான் வடக்கை நோக்கிக் கொண்டிருந்த பேருந்து நிறுத்தத்தைக் கவனித்தேன். நெகிழிப் பையொன்றைத் தலைக்குக் கீழ் தலையணையைப் போல் வைத்துக்கொண்டு மல்லாக்கப் படுத்திருந்த கிழவனைப் பார்த்தேன். கடந்த எல்லா முறையும் நான் இவ்விடத்தைக் கடக்கும்போது அவர் அங்கேயே அதே போல் உறங்கிக் கொண்டிருக்கிறார். அவர் காலம் ஸ்தம்பித்து எப்பொழுதும் போல் இருக்கிறதா? அல்லது என் சுழற்சியினுள் அவர் ஒரு கற்பனையைப் போன்று சிக்கிக்கொண்டு எனக்கு மட்டும் தெரிகிறாரா? இங்குள்ளவர்கள் அனைவரும் எனது தோற்ற மயக்கங்களாக இருக்குமோ என்று சந்தேகித்தேன். இல்லை, இருக்க வாய்ப்பில்லை. சற்றுமுன் நான் நடந்து வந்த எல்லா முறைகளிலும் என்னை இடித்துவிட்டுச் சென்ற ஓர் இளைஞன் ஞாபகத்திற்கு வந்தான். எல்லாமும் உண்மையில் நிகழ்கின்றன. அப்படியென்றால் இது என்ன மாதிரியான உலகம்? 

குழப்பம் ஞானத்துக்கு இட்டுச் செல்லும். பின்னர், ஞானம் மீண்டும் குழம்பும். நானும் அப்படித்தான் எனக்கு முன்னே நிகழும் எதனையும் சிறிதும் மாற்ற முடியாமல் அதன் ஓட்டத்தில் கரைந்திருந்தேன். அடுக்குகள் மீண்டும் களைந்து, அதே போல் இந்த நகரத்தின் எந்த முனைகளையும் மாற்றாமல், அதோ அங்குப் படுத்துறங்கும் அந்தக் கிழவனின் உறக்கத்தின் அலைகளையும் சிறிதும் களைக்காமல் மறுமுறை மறுமுறை என நிகழ்ந்து கொண்டிருக்கிறது. பகல் தின்ற பொழுதுகளின் கடைசிக் கணத்தில் நின்றிருந்தேன். அந்தப் பள்ளத்தில் என்னை விழுங்கத் தயாராக இருக்கும் இருள் துளை என்னவாக இருக்கும்? ஒன்றும் புரியாமல் என்னை நான் பின்தொடர்ந்து கொண்டிருந்தேன். 

‘சரியா 7.02க்கு எனக்கு முன்ன போய்க்கிட்டிருக்கும் என்ன நான் பிடிச்சி நிப்பாட்டப் போறன்… ஒருவேள என்ன நான் பாத்துக்கும்போது அங்க என்ன நடக்கும்னு நான் ஊகிச்சி வைச்சிருந்த எது நடந்தாலும் பாத்துக்கலாம்… இது என் சாவுக்கு அழைச்சிட்டுப் போனாலும் பரவால… இந்த டவுனோட ஒவ்வொரு காட்சியும் என்ன கொல்லுது… இதுக்குமேல உயிர் வாழ்றதல அர்த்தம் இல்லாத மாதிரி அத்தன சோர்வா இருக்கு…” 

மாலை மணி 7.02. அவனுக்கு நெருக்கத்தில் சென்று அவன் தோளை அதாவது எனது தோளை நான் தொட்டேன். அவன் திரும்பினான். சட்டென ஒரு மாபெரும் ஒளிவெட்டு எங்களைச் சூழ்ந்து பெருகியது. ஒரு புயல் சுழற்சியை ஒளிக்கீற்றுகள் உருவாக்கிக் கொண்டிருந்தன. நகரம் வளைந்து இறுகி அமிழ்ந்து உருமாறிக் கொண்டிருந்தது. 

*** 

திகதியும் ஆண்டும் தெரியாத ஒரு மாலை 7.03 

கண் விழித்தேன். எத்தனைமுறை எத்தனை மாலைகள் எத்தனை 7.03க்கள் எனத் தெரியாமல் குழம்பிப் போயிருந்த மனத்துடன் மொத்த சோர்வும் அழுத்த விழிக்கத் தடுமாறிய கண்களைக் கசக்கிக்கொண்டே கண் விழித்தேன். தலைக்கு அடியில் வைக்கப்பட்டிருந்த நெகிழிப்பை மெல்லிய சத்தம் எழுப்பியது. அதனை எடுத்துப் பக்கவாட்டில் வைத்துக்கொண்டு இருளத் துவங்கியிருக்கும் நகரத்தைக் கவனித்தேன். ராஜா லவுட் சாலை பேருந்து நிறுத்தத்தில் நாளெல்லாம் தூங்கிக் கொண்டிருப்பது அத்தனை சுகமாக இருக்கிறது. முதல் முறை எப்பொழுது இங்கு வந்தேன் எனத் தெரியவில்லை. இங்கு எதுவும் மாறவில்லை. புடு சாலை பரபரப்பு குறையாமல் அசைந்து கொண்டிருந்தது. 

சரியாக மாலை 7.03க்கு இங்கு இதே இடத்தில் கடந்த எத்தனை ஆண்டுகள் விழித்துக் கொண்டிருக்கிறேன். ஏன் விழிக்கிறேன்; நான் யார் என எதுவுமே எனக்குப் பிடிப்படவில்லை. அங்குத் தெரியும் ஒரு வளைவுக் கடைக்குப் போனதும் எனக்குப் பிடித்தமான ஒரு மாமாக் மீ கோரேங் கிடைக்கும். அதனைச் சாப்பிட்டுவிட்டு அடைக்கப்பட்டக் கடை வரிசையின் எதிரே படுத்துக்கொள்வேன். பிறகு, மீண்டும் மாலை 7.03க்கு இந்தப் பேருந்து நிறுத்தத்தில் விழிப்பேன். யாராவது கொண்டு வந்து தூக்கி வீசிவிட்டுப் போகிறார்களா என்பதும் தெரியாது. கைகள் உதறின; கால்கள் நடுங்கின. என்னைத் தேடி யாரும் வந்ததில்லை. கடந்த பல்லாயிரம் மாலைகள் எனக்கு ஒரே மாதிரி நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. 

உடல் அளவில் மனமும் தளர்ந்திருந்தது. இந்தப் பெருநகர்ச் சத்தம்; வாகனங்களின் பளபளக்கும் ஒளிக்கோவை; நடனமாடும் சாலை விளக்குகள்; சுகந்தமான புகைநெடி; நாவில் ருசிக்கும் மாமாக் மீ என அனைத்தும் எனக்கு முன்னே நர்த்தனம் ஆடிக் கொண்டிருந்தன. தள்ளாடியபடியே புடு சாலையை நோக்கி நடக்கத் துவங்கினேன். 


புகைப்படம்: பிரஷாந்த்

இதழ் 12 பிற படைப்புகள்

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்