படமொழி – 2: உலகைக் கைப்பற்றும் ஆந்தைகள்

2 நிமிட வாசிப்பு

“Ranní ptáče dál doskáče” என்கிற Czech பழமொழிக்கு ஓவியம் வரைந்துள்ளார் ஓவியர் உனாகா. இதன் ஆங்கில மொழியாக்கம், “The morning bird jumps further.” இந்தப் பழமொழி தன்னை எவ்வாறெல்லாம் பாதித்தது எனப் பகிர்கிறார்.

“காலைப் பறவை உச்சியில் பறக்கிறது” என்ற பழமொழி சிறுவயதிலிருந்தே என்னை துரத்தித் துரத்தி அச்சுறுத்தியது. மழலையர் பள்ளியில் சேர்ந்த காலம் முதல் ஆறு மணிக்கு எழுந்திருப்பது எனக்கும் என் அம்மாவுக்கும் நரகமாக இருந்தது. மாறாக, என் தந்தையோ உற்சாகமாக விசிலடித்துத் துள்ளித் திரிவார். “இதெல்லாம் போகப் போக பழகிவிடும்” என்பார். ஆனால் தொடக்கப்பள்ளி உயர்நிலைப்பள்ளி நாட்கள் வந்தும்கூட நாங்களிருவரும் அதற்குப் பழகவில்லை. என் அம்மாவும் நானும் காலைகளைச் சிடுசிடுப்புடன் கடத்துவதும் அப்பாவின் விசில் எங்களை மேலும் எரிச்சல்படுத்துவதும் மட்டும்தான் நடந்தது. காலைப் பறவைகள் எப்படி உயர உயரப் பறக்கின்றன என அவர் எங்களை உசுப்பேற்றும் போதெல்லாம் அம்மா, “அவை உயரப் பறக்கலாம்தான் ஆனால் அதிகம் தின்று சீக்கிரம் செத்துவிடும்,” என முணுமுணுப்பார்.

பெரும்பாலும் பிற்பகல் நேர வகுப்புகளாகத் தேர்வு செய்யும் வாய்ப்பிருந்த பல்கலைக்கழக வாழ்க்கையை நான் மிகவும் விரும்பினேன். சில வகுப்புகள் காலையில் இருந்தாலுமே ஒன்பதுக்கு முன் இருந்ததேயில்லை. எட்டு மணிக்கு வகுப்புகள் தொடங்கும் உயர்நிலைப்பள்ளியின் கொடூரமான நாட்கள் இன்னும் நினைவிலிருக்கின்றன. சில நேரங்களில் ஏழு மணிக்கெல்லாம் தொடங்கிவிடும். யோசித்துப் பாருங்கள், ஏழு மணிக்கு!!!

பின்பு, ஒரு வேலை கிடைத்தது. நகரின் மறுகோடியில், அதுவும் ஒரு சர்வாதிகாரியான முதலாளியின் கீழ். நரகம்! ஒவ்வொரு நாளும் சரியாக ஒன்பது மணிக்கு அலுவலகத்தில் இருந்தாக வேண்டும் என இரக்கமே இல்லாமல் வற்புறுத்துவார். அதற்கு நான் ஏழு மணிக்கே எழுந்தாக வேண்டும். நான் சுயதொழிலாக என்னுடைய கலைக்கூடத்தைத் தொடங்க முடிவு செய்ததற்கு இதுவே முக்கிய காரணமாக இருக்கலாம். ஒப்பீட்டளவில், வேறொருவரிடம் ஊழியராகப் பணிபுரிவது குறைவான மன அழுத்தத்தைத் தருவதாகப் பலர் சொல்கிறார்கள். ஆனால் எனது கலைக்கூடத்திற்கு நான் நண்பகல் நேரத்தில் வரலாம். அதைக் குறைசொல்ல யாரும் கிடையாது. இதைக் காட்டிலும் இனிமையான உணர்வு இருக்க முடியாது.

காலைப் பறவைகளின் கொடுங்கோன்மை ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரும் நேரம் இது! காலைகளைக் கொண்டாடுவதை நிறுத்துங்கள்! நம்மில் பெரும்பாலோர் 11 மணிக்கு முன்பு முழுதாக விழிப்பதில்லை என்பதையும் ஒரு நாளின் ஆக்கப்பூர்வமான பகுதி பிற்பகலுக்கு முன் தொடங்குவதில்லை என்பதையும் இப்போதாவது ஒப்புக்கொள்வோம். இரவு ஓர் அரசி. ஆந்தைகளாகிய நாம் இவ்வுலகைக் கைப்பற்றியாக வேண்டும்.


உனாகாவின் ‘படமொழி’ ஓவியத்தொடர்:

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்